பிறப்புக்கு என்ன பதில்

எதைக் காண எனை விதைத்து
உயிராக்கி உணர்விட்டாயோ
அதை நோக்கி அனுதினமும்
நான் செல்கின்றேனோ?

அறுவடைக்குள் அதை நானும்
அடைந்து விடுவேனோ - அல்ல
ஆசையினால் அமிழ்ந்ததனால்
அதை நான் மறப்பேனோ?

உடல் கொடுத்து உயிர் படைத்த
ஒப்பில்லா இறையே
உண்மையில் நான் யாரென்று
உடன் சொல்வாயோ?

கருவாகி உருவானது
காம களிப்புக்கென்றால்- என்னில்
கனந்தோறும் உருவாகும் கேள்விக்கெல்லாம்
கடலான தவ இறையே விளக்கமென்ன?

நிலை மாறி தடம் மாறி
உடல் உருக்கி உணர் சுருக்கி
உள்ளேன் நானும் - உண்மையில்
நான் யார்தானென்று அறியவைப்பாயோ?

அறிவின் கூர்மை அடங்குமுன்னே
அறிய வைத்து விட்டால்
அரைபங்கேனும் ஆளாளுக்கு நன்மைதோன்றும் - அல்ல
அடுத்த பிறப்பிலும் இதே கேள்வி எழும்பி நிற்கும்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (12-Dec-18, 5:09 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 182

மேலே