பார்வையாளனாய்

பார்வையாளனாய்

சுள்ளென்று அடித்துக்கொண்டிருக்கும் வெயிலை வைத்து பார்த்தால், மணி ஒன்றிலிருந்து இரண்டுக்குள் இருக்கலாம், எனக்கு வெயிலோ மழையோ எதுவும் பிரதானமில்லை என்றாலும் அந்தந்த காலங்களில் மனிதனிலிருந்து அனைத்து ஜீவராசிகளின் பரிதவிப்பை பார்வையாளனாக காண முடியும்.இதனால் அவர்கள் படும் போராட்டங்களை பார்க்கமுடியுமே தவிர எந்த உதவியும் செய்யமுடியாதவனாகத்தான் இருக்கமுடியும்.வேண்டுமானால் எனக்குள் வந்து ஒண்டிக்கொள்ளலாம், மழைக்கோ அல்லது வெயிலுக்கோ !அதுவும் எத்தனை நாளோ ?
அந்த வெயிலின் உக்கிரம் தாங்காமல் பாம்பு ஒன்று சாவதானமாக பதினைந்து அடி அகலமான மூடி வைத்துள்ள கேட் சந்து வழியாக தன்னுடலை நுழைத்து உள்ளே வந்தது.
அது உள்ளே நுழையும் இடத்திலிருந்து சுமார் நூறு அடி தள்ளி மிகப்பெரிய கட்டிடமாய்
நின்று கொண்டிருக்கும் என்னால், அது சாவதானமாக உள்ளே நுழைவது மிக தெளீவாக தெரிந்தது. தெரிந்தாலும் அது என்ன செய்யும் என்பது இப்பொழுதெல்லாம் எனக்கு மனப்பாடம் ஆகி விட்டது. காரணம் இந்த பாம்பை போல நிறைய் பூச்சிகள், முயல்கள், சிறு சிறு ஊர்ந்து செல்லும் பிராணிகள் இப்பொழுது என்னுள் அடக்கமாகி நிறைய நாட்களாகி விட்டன.
இப்பொழுது உள்ளே வந்திருக்கும் பாம்பு கூட உடனே என் பக்கத்தில் வராது. அங்கிருக்கும் மாமரத்து அடியில் உதிர்ந்து கிடக்கும் இலைகளுக்குள் போய் சுருண்டு படுத்துக்கொண்டு அந்த மண்ணின் ஈரப்பத்த்தை தன்னுள் வாங்கிக்கொண்ட பின்னரே மெல்ல என் இருப்பிடத்துக்கு வரும். வந்தாலும்,எந்த தொந்தரவு செய்யாமல் அதன் இருப்பிட்த்திற்கு சென்று படுத்துக்கொள்ளும். இப்படி நிறைய ஜீவராசிகள்,ஐந்து வருடங்களாய் இந்த உருவத்துக்குள் தங்கி இருக்கும்போது அதற்கு முன்னர் தங்கி இருந்த மனித கூட்டம் மட்டும் தனக்குள் சண்டையிட்டு, ஒருவர் பின் ஒருவராய் என்னை விட்டு விட்டு சென்று விட்டனர். அவர்களை நம்பி பல ஏழை குடும்பங்களையும் என் உடன் தங்கி இருக்க விடாமல் இந்த பாழும் சட்டம் அவர்களையும் கூண்டோடு காலி செய்ய வைத்து விட்டது.இவர்களால மனிதர்களை மட்டுமே வெளி அனுப்ப முடிந்தது. அதற்கு பின் குடியேறிய பாம்பு, மற்றும் அனைத்து ஜீவராசிகளும்
இங்கு வந்து குடியேறி ஐந்து வருடங்களில் இந்த சட்டங்களால் அவர்களை அனுப்ப முடியவில்லை. எனக்கு ஒன்று தோன்றுகிறது,இவைகளுக்குள் போட்டி இல்லை, இது என்னுடையது என்ற இறுமாப்பு இல்லை. இருக்கும் வரை இருக்கலாம், இல்லாவிட்டால் வேறு இடம் போய் விடலாம் என்ற எண்ணம் கூட இருக்கலாம்.அதனால் மனிதர்களால் என்னுடைய உரிமை யாருக்கு? என்று கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்தி முடியும் வரை இவைகளுக்கு எந்த தொந்தரவும் இல்லை.
ஆனால் ! இந்த சட்டபோராட்டம் நடைபெறுவதற்கு முன்னால் எனக்கு என்று தனி கம்பீரத்தை தந்து எப்பொழுதும் ஆட்கள் போவதும், வருவதுமாக, இருக்க காரணமான “ஆத்தா”
என்ற ஒற்றை ஜீவன் இருந்தவரை !
ராசப்பா எங்கடா போய் தொலைஞ்ச? தலையை சொறிந்து கொண்டே ராசப்பன் ஆத்தா
சம்சாரம் வயிறு வலின்னுச்சு, அதுதான் டவுனுக்கு போய் டாக்டரை பார்த்துட்டு வந்தேங்க.
அட உன் சம்சாரத்த கூட்டிட்டு போ வேணாங்களை, போறதுக்கு முன்னாடி உனக்கு பதிலா இருளப்பங்கிட்ட சொல்லிட்டு போயிருக்கோனுமில்லை, பாவண்டா, வாயில்லா ஜீவனுங்க,
நீ தீவனம் போடுவேன்னு நானும் பேசாம இருந்திட்டேன், வயலுக்கு போய்ட்டு வர்ற வரைக்கும் அம்மா அம்மான்னு கத்தியே கஷ்டப்பட்டுடுச்சு..
மன்னிச்சுங்குங்க, ஆத்தா, வயித்து வலின்னு சொன்னதுனால ஒண்ணும் புரியலை, அதுதான் மீண்டும் தலையை சொறிந்தான்.
சரி விடறா, டாக்டரு என்ன சொன்னாரு?
ஆத்தா சத்து குறைவா இருக்கு, மாத்திரை எல்லாம் எழுதிக்கொடுத்தாரு,வேற ஒண்ணும் பயப்படறமாதிரி இல்லைன்னு சொன்னாரு.
டேய் பேசாம உன் பொண்ஜாதியை உன்னொட கூட்டிட்டு வந்துடு. இங்க பாலை கறந்த உடனே உன் சம்சாரத்துக்குன்னு தனியா எடுத்து காய்ச்சி கொடுத்துடு, அருணாச்சலத்துகிட்ட சொல்லி வைக்கிறேன், எது செஞ்ச்சாலும் அவுளுக்குன்னு தனியா எடுத்துட்டு போ.
வாஞ்சையுடன் ஆத்தா சொல்ல, சரிங்க சரிங்க என்று தலையாட்டுவதை தவிர ராசப்பனுக்கு வேறு வேலை இல்லாமல் இருந்தது
சுமார் ஆறடி வரை உயரமிருக்கலாம், நன்கு சிவந்த நிறம், பரம்பரை பணம் இருந்தாலும், அந்த கனிவு, வேலையாட்களிடம் பேசும்போதும், செயலிலும் காட்டும் பாசம்,
வேலை செய்பவர்களை “ஆத்தா”என்ற சொல் தெய்வமாக வைத்திருந்தது.
எப்பொழுதும் அடுப்புக்குள் சாதம் கொதித்துக்கொண்டே இருக்கும், நேரம் காலம் கிடையாது, தோட்டத்து ஆட்கள், வீட்டு ஆட்கள் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு போய்க்கொண்டே இருப்பர். அங்கு பசி என்று மட்டும் வார்த்தை இருப்பதாகவே தெரியாது.
மணி வண்டிக்கார கந்தப்பனை வரச்சொல், மணி என்னும் சாந்தாமணி ஆத்தாளின் துணைக்கு இருக்கும் சிறு பெண், குடு குடுவென ஓடி சென்று கந்தப்பனை அழைத்து வந்தாள்.
கந்தப்பா, வண்டியை கட்டிவை நாளை காலையில.வயலுக்கு கிளம்பிடலாம், சரிங்க தலையாட்டிக்கொண்டே வண்டி பக்கம் சென்றான் கந்தப்பன்.
வயலில் ஒரு பக்கம் ஆட்கள் கதிர் அறுத்துக்கொண்டிருக்க, இந்த பக்கம் கரும்பு வெட்டப்பட்டு அங்கேயே போடப்பட்டிருக்கும் தற்காலிக ஆலையில் பிழியப்பட்டு காய்ச்சிக்கொண்டிருக்கும் வாசம் அந்த இடத்தையே மணக்க செய்து கொண்டிருந்தது.
காய்ச்சிய பாகுவை வாளியில் எடுத்து அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஐம்பது பேருக்கு அதனுள் இஞ்சி, மற்றும் வாசனை பொருட்களை சேர்த்து பெரிய பெரிய குவளைகளில் கொடுக்கப்பட்ட்து.
ஆத்தாளின் தோட்டத்துக்கு விருப்பமுடன் வேலை செய்ய வருவதற்கு காரணமே இந்த வஞ்சணை இல்லாத கவனிப்பும், பாசமான பேச்சும்தான்.
யாரையும் மனம் நோக பேச மாட்டாள். எவ்வளவு பெரிய தவறே செய்து விட்டாலும்
ஒரே பார்வை அவ்வளவுதான், அப்படியே செய்தவன் தலைகுனிந்து நின்று விடுவான்.
அதே போல் எந்த உதவி என்றாலும் ஆத்தாளின் உதவி எப்பொழுதும் கிடைக்கும், இது நிரந்தரமாக அந்த தொழிலாளர்கள் மனதில் பதிந்து விட்ட உண்மை.
வயல் வேலை செய்பவர்களுக்கும், கரும்பு தோட்ட்த்தில் வேலை செய்பவர்களுக்கும், தென்னந்தோப்பில் வேலை செய்பவர்களுக்கும் ஒரே இடத்தில் சமையல் வேலை நடந்து கொண்டிருக்கும். மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள், சமையல் வேலைகளில் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டிருப்பர்.
சாப்பிடும்போது ஆத்தாளின் நேரடி கவனிப்பில்தான் சாப்பாடு போடப்படும். ஒவ்வொரு இலையிலும் அள்ளி அள்ளி வைப்பாள் சாப்பாட்டை. பின்னால் வரும் ஆளை நன்றாக சாம்பார் ஊற்ற சொல்லி சொல்லுவாள். அவர்கள் வயிறார சாப்பிட்டு எல்லோரும் போய் அக்கடாவென உட்கார்ந்த பின்னாலேயே தான் சாப்பிட உட்காருவாள்.அதுவும் எல்லோரையும் போல அந்த இடத்திலேயே உட்கார்ந்து சாப்பிடுவாள்.
இரவு ஆகி விடும், வயலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளுக்கு காவல் போட்டு விட்டு வண்டி கட்டி வீடு திரும்ப. அதற்குள் இங்கு மாட்டுக்கொட்டகையில் இருக்கும் இருபது மாடுகளுக்கு தீவனம் இட்டு பாலை கறந்து இந்த வீட்டுக்கு என்று பத்து படி பாலை எடுத்து வைத்து விட்டு மிச்ச பாலை சொசைட்டி கார்ர்கள் வந்து வாங்கி சென்று விடுவர்.
பத்து படி பாலில் மூன்று படி பால் மட்டுமே ஆத்தாளின் குடும்பத்துக்கு ஒதுக்கப்படும், மற்றவைகள் அந்த வீட்டில் வேலை செய்யும் அனைவருக்கும், காப்பி, மோர், தயிர் என்று பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு விடும்.
ஆத்தாளின் மூத்த மகன் இதை பற்றி அடிக்கடி முணு முணுத்ததுண்டு. ஆத்தாள் இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்வதில்லை.
ஆத்தாளுக்கு மணியாய் மூன்று ஆண் மக்கள், இரண்டு பெண் குழந்தைகள். அனைவருக்கும் திருமணம் முடித்து வைத்து விட்டாள். பெண்கள் இருவரும் வேறு வேறு ஊர்களில் பெரிய நிலச்சுவாந்தார்களுக்கு மனைவியாகினர். ஆண் மக்கள் இருவருக்கும் தகுந்த இடத்தில் மணமுடித்து மூன்றரை ஏக்கரா விஸ்தீணமுள்ள இந்த இந்த வீட்டில் ஆளுக்கு ஒரு பக்கம் குடி வைத்து தனக்கு என்று ஒரு பகுதியில் தனியாய் இராஜாங்கம் நடத்தினாள்.
மற்றபடி தோட்டம், வயல், தோப்பு அனைத்துமே ஆத்தாவின் கவனிப்பில்தான் இருந்தது.
மகன்கள் ஆத்தாவுக்கு உதவியாக இருந்தார்கள்.
அதனால் அந்த பெரிய வீட்டில் எப்பொழுதும் வேலையாட்களும், உறவினர்களும் வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருப்பார்கள். இரவு பகல் என்பதற்கு அந்த வீட்டை பொருத்தவரை உதாரணம் சொல்ல முடியாது. காரணம் ஆத்தா இரவு பத்து மணிக்கு படுத்தால் இரண்டு மணிக்கு எழுந்து அந்த பெரிய வீட்டை ஒரு சுற்று வந்து, மாட்டு பண்ணையையும் ஒரு சுற்று வந்து விடுவாள். அந்த நேரத்திலும் ஆத்தாவுடன் ஒன்றிரண்டு ஆட்கள் கூட நடந்து கொண்டு இருப்பர்.
உதவிக்கு இருக்கும் மணி, ஏன் ஆத்தா இந்நேரத்துக்கு வெளிய போகலையின்னா
என்ன? கேட்டால் தூக்கம் வராம சும்மா படுக்கையில படுத்து இருக்கறதுக்கு இப்படி போனாத்தான் நல்லா இருக்கும். பதில் சொல்வாள்.ஏறக்குறைய பத்து ஆண் வேலையாட்களும் பத்து பெண் வேலையாட்களும் அங்கு குடியிருந்தனர். அவர்களின் குடும்பங்களும் இந்த இடத்தை சுற்றி வசித்து வந்தன.அவர்களுக்கு தனித்தனியாக குளியலறை, கழிவறைகள்
வசதிகள் செய்து கொடுத்திருந்தாள் ஆத்தா,அதனால் ஏறக்குறை இந்த இடம் ஒரு மிலிட்டரி
முகாம் போல எப்பொழுதும் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்..
வண்டி ஓட்டி கந்தப்பன் ஆத்தாளை பார்க்க வந்திருந்தான். ஆத்தா பால் சொசைட்டிகாரர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தவள் கந்தப்பன் இவளுக்காக நிற்பதை பார்த்தவுடன் அருகில் வந்து என்ன கந்தா? ஆத்தா என் பொண்ணு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கேன், நீங்க வந்து முன்னாடி நின்னு ஆசிர்வாதம் பண்ணனும்?
ஆத்தாள் ரொம்ப சந்தோசம் கந்தா, கொஞ்சம் இரு என்று சொன்னவள், மணி, மணி, தன் உதவிக்கு இருந்த பெண்ணை அழைத்தாள். ஓடி வந்த மணியிடம் போய் தட்டுல பழம் வெத்தலை அப்புறம் கணக்குப்பிள்ளைகிட்ட சொல்லி பணத்தை வாங்கிட்டு வா.பத்து நிமிடத்தில் எல்லாம் தயாராகி வர பழதட்டுடன் ரூபாய் ஐந்தாயிரம் தட்டில் வைத்து கந்தப்பா இது என்னோட பரிசு, மத்தபடி கல்யாண ஏற்பாடு செய்ய நம்ம பண்ணை
ஆளுங்க வந்துடுவாங்க, சொன்னவள் தான் மட்டும் வருவதாக சொல்லாமல் விட்டு விட்டாள்.
காரணம் வேறு ஒன்றுமில்லை, ஆத்தாளின் கணவனும் பெரிய மிராசுதார்ராய் இருந்தாலும் கணவன் மனைவி பிணக்கு காரணமாய் கிழக்கு புறமுள்ள பெரிய பண்ணையில் தனியாக போய் வசிக்க ஆரம்பித்து விட்டார். தன்னுடைய மகன்கள், மகள்கள் அங்கு சென்று போய் வருவர். ஆனால் ஆத்தா போகாமல் இருந்து விட்டாள். ஐந்து வருடங்களாக இப்படி இருப்பதால் இந்த மாதிரி கல்யாணங்களுக்கு போவதை தவிர்த்து விடுகிறாள். நாளை ஊர் ஏதாவது சொல்லிவிடும். தன்னை பற்றி சொல்வதை கண்டு கொள்ளவில்லை என்றாலும் வாழப்போகும் தம்பதிகளுக்கு பிரச்சினை வந்து விடக்கூடாதே !
ஆத்தாளுக்கு கொஞ்சம் உடம்பு சுகமில்லாதது போல் தோன்றியது, எப்பொழுதும் நடந்து கொண்டே இருப்பவள் அன்று சோர்வாய் உட்கார்ந்து விட்டாள். கூடவே இருக்கும் மணி ஆத்தா டாக்டரை வேணா போய் பாப்பமா? கேட்டவளிடம் வெற்று சிரிப்பு சிரித்தவள் வேண்டாம் மணி மனசுதான் சரியில்லை. ஏதோ வருத்தமான செய்தி வருமோன்னு பயமாயிருக்கு. அப்படி எல்லாம் ஒண்ணும் வராது ஆத்தா, சொன்னாலும் மணிக்கு ஆத்தாளின்
மன நிலை பற்றி தெரியும். அவள் மனதில் ஒன்று பட்டு விட்டால் அது ஏதோ ஒரு விதத்தில்
நடக்கும். இது இங்குள்ள வேலைக்கார்ர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.
ஆத்தாளை பொருத்தவரை வேலையாட்கள்தான் எல்லாமே. உறவுகள் கூட வர போக இருப்பார்களே தவிர ஆத்தாளிடம் நெருங்கி பேச தயங்குவர். இந்த வீட்டுக்குள் உறவுகள் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம், தங்கலாம், நன்றாக உண்ணலாம், ஆனால் எல்லாம் குறிப்பிட்ட காலம மட்டுமே, அதற்குள் உறவுகள் கிளம்பி விட வேண்டும். இது அங்கு எழுதப்படாத சட்டமாகவே ஆத்தாளின் கட்டுப்பாடு இருந்தது. அதே போல் இவளும் உறவுகளின் எல்லா விசேசங்களிலும் கலந்து கொள்வாள். உடனே வந்தும் விடுவாள்.
அன்று மாலையே ஆத்தாளின் சொல்படியே செய்தி வந்து சேர்ந்தது. ஆத்தாளின் கணவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக.இரவே அவரை பார்க்க மருத்துவமனைக்கு வண்டி எடுக்க சொல்லிவிட்டாள். ஆனால் அதற்குள் காலன் முந்திக்கொண்டு விட்டான். ஆத்தாளின் கணவர் மருத்துவமனையிலேயே இறந்து விட்டதால்
உடலை ஊருக்கு எடுத்து வருவதாக தகவல் வந்து விட்டது.ஆத்தாள் அப்படியே தளர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள்.
ஒரு மாதம் ஓடியிருந்தது. ஆத்தாள் இப்பொழுது அடிக்கடி தங்களுடைய குடும்பத்து வக்கீலை பார்க்க நகரத்துக்கு செல்கிறாள். தன்னுடைய வாரிசுகளும் அடிக்கடி ஆத்தாளிடம் காரசாரமாக பேசிக்கொள்வது அங்குள்ள வேலைக்காரர்களின் மனதுக்குள் மெல்லிய பய ரேகையை உண்டு பண்ணிவிடுகிறது.
ஆத்தா வேலையாட்களை கூப்பிட்டுக்கொண்டு வயலுக்கு வண்டி கட்டி செல்வது குறைந்து போய் விட்டது. அவள் இப்பொழுது நகரத்துக்கு சென்று வருவதுதான் அதிகம்.
இந்த ஒரு மாதத்துக்குள் ஆத்தாள் கொஞ்சம் இளைத்து விட்ட்து போல தெரிகிறது. கண்களில் கவலை ரேகைகள் கூட தெபடுவதாக தோன்றியது.
கூடவே இருந்த மணியிடம் இரவு படுக்க போகு முன் ஆத்தாள் முப்பது வருசமா எங்கூட இருக்கற இந்த பசங்களுக்கு நான் இருக்கறதுக்குள்ள ஏதாவது செஞ்சுடணும். அவள் சொல்வதை கேட்ட மணிக்கு மனசு திக்கென்றது. ஆத்தா வேணாம் நீங்க ஏதாவது சொல்ல போய் அது நடந்துடுது. தயவு செய்து இதை பத்தி பேசாதீங்க..வாங்க நாளைக்கு பண்ணைக்கு போகலாம், அங்க மனசு லேசாயிடும், பழைய மாதிரி நீங்க மாறிடுவீங்க.
வெற்று புன்னகையாய் சொன்னவர், நான் இனிமே அங்க போறதுக்கு என் பசங்க கிட்ட பர்மிசன் கேக்கணும், சொன்ன ஆத்தாளை திக்கென்று பார்த்தாள் மணி. ஆத்தா என்ன சொல்றீங்க? அங்க இருக்கற எல்லா சொத்தையும் பிரிச்சு அவங்கவங்க பேர்ல எழுதிட்டேன்.இனி அவங்கவங்க பாடு, வயலை உழுகறதும், தோப்பை பாக்கறதும்,கரும்பை காய்ச்சறதும்.. பெருமூச்சுடன் சொல்லிவிட்டு அப்படியே கட்டிலில் சாய்ந்து விட்டாள்.
வேலையாட்களுக்கு விசயம் தெரிந்துவிட்டது. இனி பண்னையம் பார்க்க ஆத்தா போகமாட்டார்கள் என்று. அவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் பெரும் திகில் புகுந்து விட்டது
இருபத்தி ஐந்து வருடத்துக்கு மேல் அங்கு வேலை பார்த்து வந்த அவர்களின் கதி?.
ஆத்தாளின் கணவர் இறந்து ஆறே மாதங்கள்தான், ஆத்தா இரவு படுத்தவர்கள் காலையில் எழுந்திருக்காமல்லேயே போய்விட்டார்கள்.கணவனிடம் சண்டையிட்டு தனியாக பண்ணையம் பார்த்தாலும் அவர் இருந்த ஒரு தைரியமே அவர்களை இயக்கிக்கொண்டிருந்தது.
அதற்கு பின் அவர்களிடம் இனி நாமும் இருக்கமாட்டோம் என்று மனசுக்கு பட்டதால்
விரைவில் சொத்துக்களை பிரித்து எழுதி வைத்து விட்டாள். ஆனால் அங்கு இருந்த வேலையாட்கள் அத்தனை பேருக்கும் ஆத்தாளின் இறப்பு என்பது வாழ்வாதார பிரச்சினை ஆகிவிட்டது.
ஒரு நாள் ஆத்தாளின் மூத்த மகன் அங்குள்ள வேலையாட்கள் எல்லோரையும்
கூப்பிட்டு உங்க எல்லாருக்கும் வீடு கட்டி குடியிருக்க ஆத்தா நம்ம கிழகோட்டுல இருக்கற ஒரு ஏக்கரா பூமிய எழுதி வச்சுட்டு போயிருக்காங்க. நீங்க சீக்கிரம் அந்த இடத்துல குடியிருக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிக்குங்க.மூணு மாசம் போதுமுன்னு நினைக்கிறேன்.இப்படி அவர் சொன்னதும் வேலையாட்களுக்கு புரிந்து விட்டது. இடத்தை காலி செய்ய சொல்லுகிறார் என்று. ஒன்றும் பேசாமல் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.
ஆறு மாதங்கள் ஓட்டமாய் ஓடியிருந்தன. இப்பொழுது அந்த பங்களாவில் பெரியமகன் குடும்பத்தை தவிர மற்றவர்கள் அனைவரும் குடி பெயர்ந்து விட்டனர். பெரியவரும், தான் தன் மகள் அமெரிக்காவில் கட்டி கொடுத்திருப்பதால் அங்கு சென்று ஒரு வருடம் இருக்கவேண்டும் என்று விரும்பினார்.
வீட்டை இடித்து ஒரு சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று விரும்பி வேலை ஆரம்பிக்க நினைத்த பொழுது அவருக்கு ஒரு பதிவு தபால் வந்தது. அதை பிரித்து பார்த்தவருக்கு கோபம் தலைக்கேறியது. அவருடைய உடன்பிறப்புக்கள் அந்த மூன்று ஏக்கராவுக்கு உட்பட்ட வீட்டுக்கு உரிமை கோரி வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
வருடம் ஒன்றாகிவிட்டது. இப்பொழுது பெரிய மகனும் அமெரிக்காவிற்கு சென்று விட்டார். வீடு யாருக்கு என்று கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. வரும்போது
பார்க்கலாம் என்று அனைத்து வாரிசுகளும் அவரவர் வேலைகளை பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்.இப்பொழுது அங்கு யாருமே வசிக்கவும் இல்லை. எப்பொழுதும்
பரபரப்பாய் காணப்படும் வீடு இப்பொழுது மயான அமைதியாகி விட்டது. இது ஐந்து வருடங்களாக இப்படித்தான் இருக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைந்து வயிறார சாப்பிட்டுவிட்டு திருப்தியாய் ஊருக்குள் நுழைந்த ஊர் மக்க:ள் இப்பொழுது இந்த வீட்டை “பேய் பங்களா” என்பது போல பார்த்து விலகி செல்கின்றனர்.
மனிதர்கள் போனால் என்ன? எத்தனையோ விசமுள்ள, விசமில்லா ஜந்துக்கள் இங்கு வசித்துக்கொண்டுதான் இருக்கின்றன.இவைகள் இங்கு குடி வந்துவிட்டதால் எனக்கு ஒன்றும் தனிமையாக இருப்பது போல தெரியவில்லை.என்றாலும் “ஆத்தா” என்ற ஒற்றை ஜீவன் என்னுள் வாழ்ந்த அந்த காலங்களை மட்டும் அசைபோட்டுக்கொண்டு பார்வையாளனாக நடப்பவைகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Dec-18, 10:44 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 133

மேலே