காதல் கற்பனைகள் -3

பதினெட்டு வருடங்களுக்கு முன் எழுதிய கவிதைகள் சில இன்று கண்ணில் பட்டது . 12 ம் வகுப்பு விடுமுறையில் , கவிதை எழுதி பழகி கொண்டிருக்கும் பொழுது எழுதியவை . முதன் முதலில் கவிதை எழுதும் ஒருவனுக்கு காதலை தவிர வேறு என்ன எழுத தோன்றும் ? எழுதியது அனைத்தும் காதல் கவிதைகளே . ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்ததால் அனைத்தும் வெறும் கற்பனையே . நமது வாழ்வில் தான் காதல் என்ற அசம்பாவிதம் நடக்கவே இல்லையே . காதலர் தினம் அருகில் வருவதால் சரியாக இருக்கும் என மறுபடியும் , கந்தலாகி போன காகிதங்களில் இருந்து .

கதிரவன்
மலை காதலியை
விட்டுப் பிரியும்
காலை நேரத்தில்
துடைத்து வைத்த
குத்து விளக்காய்
ஈரக் கூந்தல்
நடைக்கேற்ப
தாளம் போட
கண்மணி நீ
அன்று வந்தாய்
குழாயடி நீர்
பிடிக்க !!

கண்களில் தூக்கம்
மிச்சமிருக்க
கலைந்த கேசத்துடன்
வீட்டிலிருந்து
உனை பார்த்தேன்
போன தூக்கம்
திரும்பவில்லை
இன்று வரை !

உன்னை தொடர
முற்பட்டேன்
வழிமறித்தனர்
நண்பர்கள் சிலர்
இன்று
அவர்கள் முறையாம் !!

தினந்தோறும் முறை
வைத்து
பலர் உன்னை
சுற்றுவதை
பின்னர் நான்
அறிந்தேன் .

நெருங்க கூட
முடியாது என
திரும்பிவிட
வாய்ப்பு வந்தது
பட்டிமன்றங்களில் !!!

எப்போதும் அவள்
எதிரணிதான்!

ஆலமரத்தின்
அடிவிழுதான
நடுவர் அவர்களே
என்பதெல்லாம்
அவள்
அருகில்
வரும்போது
மறக்க
அசட்டுச் சிரிப்புடன்
பார்த்துக்கொண்டே
ஓடிவிடும் பொழுதுகளை
நாடி மட்டுமே
இருந்தது வாழ்கை !!

என்ன நினைத்தாயோ
தெரியவில்லை
பட்டிமன்ற போட்டி
ஒன்றில் பேச
போகும் முன்
லூசு உன்னை
லவ் பண்ணுகிறேன்
என்றாய்

தலைப்பு மறந்து
கூடி இருந்த
அனைவருக்கும்
என் காதலை
சொல்லிவிட்டு
நடுவருக்கு
முத்தம் கொடுக்கச்
சென்ற என்னை
இழுத்துப் போயினர்
நண்பர்கள்

பிறகு
நாம் சந்தித்த போது
பேசவில்லை
பேசவும்
நேரமில்லை

-பாவி

எழுதியவர் : பாவி (8-Feb-19, 10:24 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 487

மேலே