அதெப்படி,

அதெப்படி?

என்னை இருக்கி

உடுத்திக்கொண்டும்,

அவனை போர்த்திக்கொண்டும்

உறங்குகிறாய்?



அதெப்படி?

என்னை நேர் வகிடாக்கி,

அவனை ஒரு பக்க பூவாய்

சூடுகிறாய்?



அதெப்படி?

என் பெயரை சூட்டி,

அவன் குழந்தையை

கொஞ்சுகிறாய்?



அதெப்படி?

என்னை இடையிலும்

அவனை குடத்திலுமாய்

தழும்பாமல் சுமக்கிறாய்?



அதெப்படி?

என் ஞாபத்தின் ஊடே,

அவனை நினைப்பதாய்

மறக்கிறாய்?



அதெப்படி?

என் சொல்லெடுத்து,

அவன் மெளனத்தில்

பேசச் சொல்கிறாய்

ஊமையாய்?



அதெப்படி?

உன் வீட்டுக்கண்ணாடியில்

என்னை ரசமாக்கி,

அவனிடம் சரசமாய்

பிரதிபலிக்கிறாய்?

எழுதியவர் : சபீரம் சபீரா (29-May-19, 8:02 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 178

மேலே