இலியிச் பின்னிணைப்பு 1 மற்றும் 2

பின்னிணைப்பு 1:


இலியிச்.

இந்த பாத்திரம் ஒரு கற்பனையா அல்லது உண்மையா என்பது முக்கியமல்ல.

ஒரு நாவலின் முழு இலக்கணமும் அதன் கட்டுக்கோப்பும் வழக்கமான நடையும் போதனைகளும் முடிந்த மட்டிலும் நான் தவிர்க்கவே விரும்பினேன் என்றாலும் இது முற்றும் பழைய வடிவம்தான்.

சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய ஜே.ஜே.சில குறிப்புகள் எனும் நாவலின் பளபளப்பில் இருந்து இதுவும் தெறித்து விழுந்த ஒன்றுதான்.

ஜோசப் ஜேம்ஸ் என்னும் கதாபாத்திரம் என் இருபதுகளில் தீராத கேள்விகளை உண்டாக்கி என் அப்போதைய தீராத மயக்கங்களை உருக்கி கொண்டே வந்தது.

அதன் பாதிப்பில் இப்படி ஒன்றை நான்
எழுத நேர்ந்ததும் முற்றிலும் திட்டமிடாத ஒன்றுதான்.

பாதிப்பில் எழுதுவது என்பதால் அதையே எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அப்படியொன்றை ஆரம்பம் முதலே இதில் நான் தவிர்த்து வந்து இருக்கிறேன்.

இதில் இருப்பவர்கள் யாவருமே இருந்தவர்களும் இன்னும் இருப்பவர்களும்தான். அவர்களும் இதை படிக்க மாட்டார்கள் என்ற நெஞ்சுரம் உண்டு.

இந்த கதையை புனைவு என்று அழைக்கவே விரும்புகிறேன்.

இந்த புனைவை படிப்பவருக்கு நான் இங்கே கேட்டு கொண்டதெல்லாம் உடனடி கேள்விகளுக்கு உடனடியாக பதிலை எதிர்பார்க்க வேண்டாம் என்பதுதான்.
அது நான் எழுதுவதை பாதிக்க விரும்பவில்லை.

சிலருக்கு தொலைபேசியிலும் சிலருக்கு தகவல் பக்கத்திலும் கூறினேன். சிலரின் தகவல் பக்கம் இதுவரையில் திறக்கப்படவே இல்லை.

இருந்தாலும் அதே பத்து பேர் இன்னும் என்னை விட்டு விடாமல் வாசிப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள்.

இந்த புனைவுகள் பற்றிய கேள்விகளும் விமரிசனங்களும் ஏன் இப்படி என்ற ஒன்றை நோக்கி வாசகர்களை கூட்டி செல்ல வேண்டும் என்பதே என் ஆவல்.

அப்படியொரு தேவையை முக்கியத்தை கிளர்ச்சியை நீங்கள் அடைய முடியுமானால் இந்த புனைவு தன் நோக்கத்தை எட்டி இருக்கிறது என்று ஒரு ஆறுதலை கொள்ள முடியும்.

இதில் வாழ்க்கையை அதன் விரிசலை பார்ப்பதற்கு இலியிச் எனக்கு உதவி இருக்கிறான். அவன் பார்வைகள் எனக்கு முன் காலத்தில் மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது.

என்னை நான் கேட்டுக்கொண்ட கேள்விகள் அனைத்திலும் இலியிச் தன் சுயமான பார்வையை பகிர்ந்து கொள்ள அனுமதித்தேன். அது நீங்கள் அப்படியே ஏற்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

இலியிச் ஒரு ரஜினித்தனமான பாத்திரம் அல்ல. கூடப்பிறந்தவர்களிடம், நடைபாதை வியாபாரிகளிடம், குமாஸ்தாக்களிடம், அப்பாக்களிடம் எதிரியாகவும் நண்பனாகவும் தெரியக்கூடிய அன்பும் கறார் பேர்வழியாகவுமே பார்க்க முடியும்.

நீங்கள் இதை பொறுமையோடு வாசிக்க வேண்டும்.

உங்கள் கேள்விகள், விமரிசனம் எதுவாயினும் பதிவு செய்தால் பதில் அளிக்க காத்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்

மிக்க அன்புடன்
ஸ்பரிசன்.

ஜூலை 6, 2019.

____________________________________
பின்னிணைப்பு 2:


இலியிச்சை தேடி அலைந்த பயணம் எப்போதும் ஒரு தோல்வி அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன்.

இந்நிலையில் நேற்று என்னை வந்தடைந்த தகவல் அதையே மீண்டும் ஒரு முறை உறுதி செய்தது.

என் கேரள நண்பர் கிருஷ்ணன் மேனன் மூலம் வந்த செய்திதான் அது.

கோழிக்கோடு ஈஸ்வரன் நாயர் என்பவர் அங்கிருக்கும் நூலகத்தில் பணி புரிந்து இப்போது பணி ஓய்வு பெற்று  தன் மகளுடன் வசித்து வருகிறார். அவரிடம் இலியிச் எழுதிய கடிதங்களின் மூலப்பிரதிகள் இன்றும் இருக்கிறது.  அதை தாம் பார்த்ததாகவும், அதன் நகலை மட்டும் அவரிடமிருந்து பெற்று கொள்ளலாம் என்றும் முடிந்தால் உடனே

நீ அங்கு சென்று இதுபற்றி பேசினால்  வாங்கிக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

அதை ஈஸ்வரனிடம் பெற்றுக்கொள்ள எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இருக்கும் அல்லது இருந்து இருக்குமிடம் தெரியாத ஒரு மனிதரின் பிரதிகளை பதிப்பிப்பது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டதால் இலியிச்சின் குடும்ப உறுப்பினரின் ஒப்புதல் முக்கியம் என்பதையும் எனது வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலை நான் பின்பற்றியாக வேண்டி இருக்கிறது.

வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு காலகட்டத்தில் இலியிச் எழுதி இருக்கிறான். அது அவனோடு பேசுவது போலவே ஏறத்தாழ இருக்கிறது என்று கிருஷ்ணன் மேனன் தெரிவித்து இருக்கிறார்.

சில கடிதங்கள் முற்றுப்பெறாது நின்றிருக்கிறது அதன் மூலம் இலியிச் என்ன சொல்ல வருகிறான் என்பதும் மிக முக்கியமான ஆய்வுக்கு உரியது என்பதாலும் இதை தவற விடவேண்டாம் என்று கிருஷ்ணன் மேனன் தெரிவித்து இருப்பது ஏன் ஆவலை கூட்டி இருக்கிறது.

எல்லாம் சரியாக கை கூடி வந்தால் நான் அதை வெளியிட தயங்க மாட்டேன்.

வாய்ப்பிருப்பின் நாம் சந்திக்கலாம்.

மிக்க அன்புடன்
ஸ்பரிசன்
08 ஜூலை 2019.

====================================

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Jul-19, 12:34 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 64

மேலே