நம்பிக்கை வைத்திடு

மாறுபடும் எண்ணங்களால்
மாற்றங்கள் நிகழ்கிறது
மனங்களில் !

வேறுபடும் கருத்துக்களால்
வேற்றுமை உருவாகிறது
மண்ணில் !

அலைபாயும் நெஞ்சில்தான்
வழியுமளவு தேங்குகிறது
ஏக்கங்கள் !

குன்றிய உள்ளத்தில்தான்
குன்றுகளாய் குவிகிறது
குறைகள் !

மனதில் கொள்ளடா
கீழோர் மேலோரில்லை
பிறப்பினில் !

பண்படும் இதயத்தில்
புண்படும் சொற்கள்
பிறக்காது !

வஞ்சகர் நெஞ்சில்
வன்மம் புயலாய்
சீறியெழும் !

பகுத்தறிந்து வகுத்திடு
பயனுறும் வகையில்
கொள்கைகளை !

சேவற் இனமல்லநாம்
கேளிக்கைக்குப் போரிட
உணர்ந்திடு !

தூண்டி விடுபவர்கள்
தூரம்நின்று ரசித்திடுவர்
புரிந்திடு !

தமிழ் இனத்திற்கென
தனிப்பெருமை உண்டு
மறவாதே !

கட்சிகளால் பிரிந்தாலும்
காட்சிகள் வேறானாலும்
கவலையுறாதே !

நாளை நமதென
நம்பிக்கை வைத்திடு
தளராதே !

பழனி குமார்
31.07.2019

எழுதியவர் : பழனி குமார் (31-Jul-19, 3:06 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 1019

மேலே