நம்பிக்கை வைத்திடு

மாறுபடும் எண்ணங்களால்
மாற்றங்கள் நிகழ்கிறது
மனங்களில் !
வேறுபடும் கருத்துக்களால்
வேற்றுமை உருவாகிறது
மண்ணில் !
அலைபாயும் நெஞ்சில்தான்
வழியுமளவு தேங்குகிறது
ஏக்கங்கள் !
குன்றிய உள்ளத்தில்தான்
குன்றுகளாய் குவிகிறது
குறைகள் !
மனதில் கொள்ளடா
கீழோர் மேலோரில்லை
பிறப்பினில் !
பண்படும் இதயத்தில்
புண்படும் சொற்கள்
பிறக்காது !
வஞ்சகர் நெஞ்சில்
வன்மம் புயலாய்
சீறியெழும் !
பகுத்தறிந்து வகுத்திடு
பயனுறும் வகையில்
கொள்கைகளை !
சேவற் இனமல்லநாம்
கேளிக்கைக்குப் போரிட
உணர்ந்திடு !
தூண்டி விடுபவர்கள்
தூரம்நின்று ரசித்திடுவர்
புரிந்திடு !
தமிழ் இனத்திற்கென
தனிப்பெருமை உண்டு
மறவாதே !
கட்சிகளால் பிரிந்தாலும்
காட்சிகள் வேறானாலும்
கவலையுறாதே !
நாளை நமதென
நம்பிக்கை வைத்திடு
தளராதே !
பழனி குமார்
31.07.2019