பறைபட வாழா அசுணமா – நான்மணிக்கடிகை 2

நேரிசை வெண்பா

பறைபட வாழா அசுணமா உள்ளங்
குறைபட வாழார் உரவோர்1 - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ்2 சால்பு. 2

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

கேகயப் பறவைகள் பறையின் ஓசை தஞ்செவியிற் பட்டால் உயிர்வாழ மாட்டா;

அறிவுடையோர் தமது பெருநிலை (‘உள்ள' மென்றது ஈண்டு ஊக்கத்தை. ‘தமது ஊக்கங் குறையும்படி ஏதேனும் அலர்மொழி ஏற்படுமானால் உரவோர் உயிர் தாங்காரென்பது கருத்து) குறைபட்டால் உயிர் தாங்கமாட்டார்;

மரங்கள் நிறைந்த காட்டில் மூங்கில்கள் நெல்லுண்டான போதே பட்டுப் போகும்;

நிறையுடைய சான்றோர் தமது நிறைவுக்குக் குறைவான இழிவுரைகள் உண்டானால் உயிர் வாழ மாட்டார்.

கருத்து:

சான்றோர்கள் தமக்கு மானக்கேடு உண்டாகும்படி உயிர்வாழ மாட்டார்.

விளக்கம்:

பறை - ஒருமுகக் கருவி.

‘உள்ள' மென்றது ஈண்டு ஊக்கத்தை. ‘தமது ஊக்கங் குறையும்படி ஏதேனும் அலர்மொழி ஏற்படுமானால் உரவோர் உயிர் தாங்காரென்பது கருத்து.

பெரியோர் செயல் அவரியல்பின் மேலேற்றிச் ‘சால்பு வாழாதாம்' எனப்பட்டது:

இச்செய்யுளிற் கூறப்பட்ட கருத்துக்கள் நான்கும் ஒன்றே யாயினும்; நூன்முறைமை பற்றி நாற்பொருளாய்க் கூறி விளக்கினார்.

1. பெரியோர், 2 சொல்பட்டால் சாவதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-19, 4:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

மேலே