முதுமொழிக் காஞ்சி 91
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான். 1
தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை: நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மேன்மை யடைதலை விரும்புவோன் பிறரை மேன்மைப் படுத்திச் சொல்லும் சொற்களைச் சொல்லாமல் தவிரான்.
தான் சிறப்படைய விரும்புவோன் பிறருடைய சிறப்புக்களை எடுத்துரைக்கப் பின்வாங்கமாட்டான்.
தண்டுதல் - நீங்குதல். தண்டான் - நீங்கான் - மாறான் - தவிரான்.
'தண்டாமலீவது தாளாண்மை' என்றும் 'கண்டாம் கலுழ்வ தெவன் கொலோ? தண்டா நோய், தாம்காட்ட யாம்கண் டது' என்றும் வருவனவற்றில் இச்சொல் இப்பொருளில் வருகின்றது.