மீண்டும் மலபார் ----------காசர்கோட்டு---பி எஸ் என் எல் ---பயண அனுபவங்கள்

மலபாருடன் என் உறவு என்பது மிக ஆழமாக வேரூன்றியது. பொதுவாக நாம் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்து அங்கிருந்து கிளம்பிச் சென்றால் சிலமாதங்களிலேயே எல்லா உறவுகளும் அறுந்துவிடும். மெல்லிய உதிரி நினைவுகளே எஞ்சியிருக்கும். வேலைபார்த்த ஊர்களுக்கு திரும்பச் செல்பவர்கள் மிக அரிது. நானும் அவ்வாறுதான், விதிவிலக்கு மலபார்.

காசர்கோட்டுக்கு 1984 நவம்பரில் சென்றேன். 1989 பிப்ரவரியில் அங்கிருந்து கிளம்பினேன். ஏறத்தாழ ஐந்தாண்டுகள். காசகோட்டிலிருந்து கிளம்பி 31 ஆண்டுகளாகின்றன. ஆனால் அன்றிருந்த உறவுகள் அனைத்தும் அவ்வண்ணமே தொடர்கின்றன. அனைவருடனும் நெருக்கம் நீடிக்கிறது. காசர்கோட்டு நண்பர்கள் இன்று நீலேஸ்வரம், செறுவத்தூர், காஞ்ஞாங்காடு, கண்ணூர், தலைச்சேரி என பிரிந்து கிடக்கிறார்கள். அனைவருடனும் தொடர்பிலிருக்கிறேன். அங்கே சென்றுகொண்டே இருக்கிறேன்.

இம்முறை சற்றே வருத்தமான ஒரு பயணம், ஆனால் உற்சாகமானதாக ஆக்கிக்கொண்டோம். பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து கண்ணூர், காசர்கோடு மாவட்டத்திலிருந்து மட்டும் 400 பேர் விருப்ப ஓய்வு கொடுக்கிறார்கள். மாநிலம் முழுக்க 9000 பேர். தேசம் முழுக்க 80000 பேர். ஓய்வுபெறும் என் – நண்பர்களுக்கு ஒரு கூடுகையை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நான் சென்றது அதில் கலந்துகொள்ள.

விருப்ப ஓய்வு என்றால் விரும்பி ஓய்வுபெறுவது அல்ல, கிட்டத்தட்ட வெளியே தள்ளப்படுவது. சென்ற நான்காண்டுகளாக மிகமிகக் கடுமையான பணிச்சுமை. வேலையே செய்யமுடியாத சூழல். அடிப்படை நிர்வாகத்திற்குக் கூட பணமில்லாத நிலை. ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. ஆனால் விடுப்பு எடுப்பதற்கும் அனுமதி இல்லை. கூடவே இடமாற்றல் மிரட்டல்கள். தெருத்தெருவாகச் சென்று சிம்கார்டு விற்கவேண்டும் என்னும் கட்டாயங்கள்.

பி.எஸ்.என்.எல் சிம்கார்டை மக்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. ஏனென்றால் தொழில்நுட்பரீதியாக ஜியோ அல்லது ஏர்டெல் கொண்டுள்ள எந்த தரமும் பி.எஸ்.என்.எல் அமைப்புக்கு இல்லை. உலகின் பிரம்மாண்டமான தொலைதொடர்பு நிறுவனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. அதற்கு நவீனத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களுக்கு அரசு அனுமதி அளிக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதன் 2ஜி ஏலம் அரசு கணக்காயராலும் நீதிமன்றத்தின் அதிரடிகளாலும் முடக்கப்பட்டபின் வெளிநாட்டு நிதிமுதலீட்டாளர் வருவதில்லை.

அரசு சமீபத்தில் சில ஆயிரம்கோடி ரூபாயை பி.எஸ்.என்.எல்க்கு ஒதுக்கியது. பி.எஸ்.என்.எல்-ஐ சீரமைக்க போகிறது என்ற செய்தி வந்தது. ஆனால் ஊழியர்களை விருப்ப ஓய்வில் அனுப்புவதற்குரிய நிதி அது. அவர்களுக்குரிய ஓய்வூதியம் அரசக்கணக்கிலிருந்து கொடுக்கப்படும், ஏனென்றால் அது முன்னரே அவர்களின் ஊதியத்திலிருந்து ஓய்வூதிய நிதிக்கு செலுத்தப்பட்டது. பிறகு வந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளது, அவர்களுக்கு அரசு அளிக்கும் ஓய்வூதியம் இல்லை. ஒரு சேமிப்புத் தொகை அளிக்கப்படும், அவ்வளவுதான்.

பழைய ஊழியர்களை அனுப்பிவிட்டு குறைந்த ஊதியத்தில் புதிய ஊழியர்களை எடுப்பதும், அதன்பின் பி.எஸ்.என்.எல்ன் பங்குகளை தனியாருக்குவிற்று அதை தனியார்மயப்படுத்துவதுமே அரசின் திட்டம். பி.எஸ்.என்.எல்னின் முதலீட்டு மதிப்பில் ஐந்து சதவீதம்கூட அதன் பங்குகளின் விலையில் பிரதிபலிப்பதில்லை. அதன் சொத்துக்களின் சந்தை மதிப்பை நோக்கினால் அரைசதவீதம்கூட பங்குமதிப்பில் பிரதிபலிப்பதில்லை. அதாவது நூறுரூபாய் மதிப்புள்ள – நிறுவனத்தை பங்குச்சந்தையில் ஐம்பது பைசாவுக்கு விற்கவிருக்கிறார்கள். ஆனால் அதை பெருநிறுவனங்களே வாங்க முடியும்.

காலை பத்துமணிக்கு விழா. நீலேஸ்வரம் அருகிலுள்ள விவசாயக் கல்லூரியின் அரங்கில். முந்நூறுபேர் வரை வந்திருந்தனர். நான் பேசினேன். பழைய நினைவுகள். கூடவே ஓய்வுப்பிந்தைய மறுதொடக்கம் எப்படி அமையவேண்டும் என்று சில ஆலோசனைகள்.

அவர்களுக்கு நான் ஒரே சமயம் பழைய ஜயமோகனன், இன்னொரு பக்கம் அவர்களிடமிருந்து எழுந்து வெற்றிபெற்ற ஒருவன். மலபாரின் பண்பாடே வேறு. அவர்களின் பார்வையில் எழுத்தாளன் ஒரு பேராளுமை. அரசியல், சினிமா, தொழில்வெற்றி எதுவுமே அதற்கு நிகரானது அல்ல. கொண்டாட்டம் சிரிப்பு என ஒருநாள்.

விருப்ப ஓய்வுபெற்றவர்களைத் திரட்டி ஒரு கூட்டுறவு சங்கம் அமைப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். தொலைதொடர்பு சார்ந்த, சுற்றுலா சார்ந்த சிறுதொழில்கள் எதையாவது செய்யலாம் என்ற திட்டம். ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்தாயிரம் பங்குகள். ரவீந்திரன் கொடகர என்னும் சங்கத்தோழர் முன்கை எடுத்துச் செய்கிறார்.

கேரளத்தில் பொதுவாக கூட்டுறவு அமைப்புக்கள் வெற்றிகரமாகவே நிகழ்கின்றன. அதற்குக் காரணம் பொதுநலம் நாடும் சிலர் அவற்றை வழிநடத்துபவர்களாக அமைகிறார்கள் என்பது. தமிழகத்தில் சாதிப்பூசலும் ஊழலும் சேர்ந்து இத்தகைய அமைப்புக்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன.

எழுதியவர் : ஜெ (24-Jan-20, 2:02 am)
பார்வை : 8

சிறந்த கட்டுரைகள்

மேலே