கொரானோ எதிரொலி

பணிசெய்யும் நாளிலும்
பிணிவந்தார் போலவே
முனிவரை மிஞ்சுமளவு
அடங்கி ஒடுங்கியுளார்
ஓடிவிளையாடும் சிறுவர் !

ஓய்வாக சாய்ந்துள்ளார்
அடுக்களையே கதியென
தஞ்சமிருக்கும் தாய்மார் !

ஊரடங்கு உத்தரவிலும்
ஆணை அமலாக்கத்திலும்
சாட்டையடிக்கு சரணாக
மேலிடத்துக் கட்டளையால்
பலியாட்டின் நிலைபோல
கணினியும் கையுமாக
அலுவலக வேலைகளை
அமைதியின் உருவமாக
அசையாத கற்சிலையாக
செவ்வனே செய்கின்றார்
வேலைக்கு செல்வோர் !

மாறித்தான் போனது
அவணியே சோகமாய்
வைரஸின் வீரியத்தால்
கொரோனா தாக்கத்தால்
கொடுமை இதுவன்றோ !

ஆதங்கமாய் பார்க்கின்றன
ஐந்தறிவு உயிரினங்களும்
அகிலத்தின் நிலைகண்டு
ஆறுதலும் கூறுகின்றன
ஆறறிவு கொண்டவனுக்கு
ஆச்சரியம் கொள்கின்றன
இதிலாவது ஒற்றுமையென
அறிவுரையும் சொல்கின்றன
இறுதிவரை இணைந்திருவென !

உடலால் தனித்திருப்போம்
உள்ளத்தால் இணைந்திருப்போம்
உயிர்க்கொல்லியை வெல்வோம் !

பழனி குமார்
31.03.2020

எழுதியவர் : பழனி குமார் (31-Mar-20, 9:47 am)
பார்வை : 233

மேலே