அந்த மூன்று நாட்கள்

பெண்ணை போற்றும் இவ்வுலகில்
அவளே தீண்டத்தகாதவள் ஆனாள்
அந்த  மூன்று  நாட்கள் !

பெண்ணை தெய்வமாக  வணங்குவோரும்
அவள் தெய்வத்தை  வணங்க தடையிட்டனர்
அந்த  மூன்று நாட்கள் !

பூவைப்போல் மென்மையானவள் பெண்
அவள் பூவை தொட்டால் கருகிவிடும் என்றனர் அந்த மூன்று நாட்கள் !

பெண்ணின் உதிரத்தில் இருந்து உருவான சிசுவை கொண்டாடும் உற்றார்
அவள் உதிரப்போக்கை உணர்வதில்லை
அந்த  மூன்று  நாட்கள் !

உடலில்  மிக வலிமையான எலும்புகளும்
முதுகுத்தண்டும் வாள் வீசி சண்டை இடுகின்றனர் அந்த  வலிகளையும் பொறுக்கிறாள் பெண் அந்த  மூன்று நாட்கள் !

தினம் பம்பரமாய் சுற்றி திரியும் பெண்
ஓர் இடத்தில்  அமரமுடியாமல் நிற்க முடியாமல்  வேதனையை அனுபவிக்கிறாள் அந்த  மூன்று நாட்கள் !

ஒன்றல்ல  இரண்டல்ல மாதம் மாதம்  இந்த வலிகளையும்,  வேதனையையும்,  உதிரப்போக்கையும் அனுபவிக்கிறாள் பெண் அந்த  மூன்று நாட்கள் !

உறவுகளின் ஆதரவும் அவளவனின் முத்தங்களும்  அவளுக்கு அரவணைப்பாய் இருந்தால் தூசு போல் கடந்து விடுவாள் பெண்  அந்த மூன்று நாட்களை !!!

எழுதியவர் : நந்தினி மோகனமுருகன் (30-Apr-20, 6:42 am)
பார்வை : 471

மேலே