குமரேச சதகம் – வேட்டகத்து இகழ்ச்சி - பாடல் 72

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேட்டகந் தன்னிலே மருகன்வந் திடுமளவில்
மேன்மேலும் உபசரித்து
விருந்துகள் சமைத்துநெய் பால்தயிர் பதார்த்தவகை
வேண்டுவ எலாமமைப்பார்

ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர் தைலமிட்(டு)
உறுதியாய் முழுகுவிப்பார்
ஓயாது தின்னவே பாக்கிலை கொடுத்திடுவர்
உற்றநாள் நாலாகிலோ

நாட்டமொரு படியிரங் குவதுபோல் மரியாதை
நாளுக்கு நாள்குறைவுறும்
நகைசெய்வர் மைத்துனர்கள் அலுவல்பார் போஎன்று
நாணாமல் மாமிசொல்வாள்

வாட்டமனை யாளொரு துரும்பாய் மதிப்பளவன்
மட்டியிலும் மட்டியன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 72

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

மனைவியின் தந்தை வீட்டில் மருமகன் வந்தவுடன் மேலும் மேலும் ஆதரவுகாட்டி புதிய உணவுகளைச் சமைத்து நெய்யும் பாலும் தயிரும் கறிவகைகளுமாக விரும்பியவற்றை யெல்லாம் செய்து வைப்பார்கள்;

உடலுக்கு வலிமைதரும் சிற்றுண்டி வகைகளைச் சமைத்துக் கொடுப்பார்கள்; எண்ணெய் தேய்ப்பித்து நலம் பெற நீராட்டுவார்கள்; தின்பதற்குத் தொடர்ச்சியாக வெற்றிலையும் பாக்கும் அளிப்பார்கள்; (அங்குத்) தங்கிய நாட்கள் நான்கு ஆகிவிட்டால்,

அவனுக்குச் செய்யும் ஆதரவு ஒவ்வொரு வகையாகக் குறைவது போல மதிப்பும் ஒவ்வொரு நாளாகக் குறையும்; மைத்துனர்களெல்லோரும் இகழ்ந்து பேசுவர்; மனைவியின் தாய் சென்று ஏதாவது வேலைசெய் என்று (முன் இருந்து) வெட்கம் இல்லாமல் விளம்புவாள்;

வழிபடுதற்குரிய மனைவியும் அவனை ஒரு துரும்பு போல நினைப்பள்; (ஆகையால்) அவன் பேதையிலும் பேதை அல்லனோ?

அருஞ்சொற்கள்:

வேட்டல் - விரும்புதல்: மணம்புரிதல், உறுதி - நன்மை; திண்மையும் ஆம்.

கருத்து:

விருந்தும் மருந்தும் மூன்றுநாள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-20, 3:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே