தலைவர்கள்

இவர்கள்
பசி பட்டினியில் பட்டுப்போன பாமரனுக்கு பந்தி போட்டு பண்டமூட்ட வந்த புனிதர்கள் அல்ல...

இருப்பதைப் பிடிங்கி வறுமையின் கொடுமையைக் கடுமையாக்கும் காட்டுமிராண்டிகள்!

இவர்கள் கேள்விகளுக்கு *ஊமையாய்* இரு!!

இவர்கள்
பட்ட காயத்தை மாயமாய் மறையச் செய்ய வந்த நியாயம் தெரிந்த நேயமுள்ள நீதிமான்கள் அல்ல...

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வேதனையை கூட்ட வந்த வன்மம் கொண்ட வஞ்ச நெஞ்சகர்கள்!

இவர்கள் சொற்களுக்குச் *செவிடனாய்* இரு!!

இவர்கள்
சாதி மத குப்பைகளில் கொழுந்து விட்டெரியும் கனலை அணைக்க வந்த அறிஞர்கள் அல்ல...

எரியும் தீயில் எண்ணையை ஊற்றி எட்டி நின்றே கைகொட்டி எள்ளி நகையாடும் பகையுள்ளம் கொண்ட பாதகர்கள்!

இவர்கள் செயல்களுக்குக் *குருடனாய்* இரு!!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (19-Jul-20, 12:13 pm)
Tanglish : thalaivargal
பார்வை : 31

மேலே