கொரோனா நோய்த் தொற்று- அறிந்து கொள்ள வேண்டியது

............................................கொரோனா நோய்த் தொற்று- அறிந்து கொள்ள வேண்டியது....................................

1. கொரோனா தொற்று என்றால் என்ன?

........கொரோனா என்பது ஒரு வைரஸ். கொரோனா என்கிற லத்தீன் வார்த்தைக்கு கிரீடம் என்று பொருள். சூரிய கிரகணத்தின்போது சூரியனைச் சுற்றித் தெரியும் ஒளிக் கற்றைகளுக்கும் கொரோனா என்று பெயர். இந்த வைரஸை நுண்ணோக்கி மூலம் பார்க்கிறபோது இதன் உடலமைப்பு, சூரிய கிரகணத்துச் சூரியன் போல ஒளி வட்டத்துடன் தென்படுவதால் இது கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மிருகங்களின் மூலமாக மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. முதல் கொரோனா தொற்று சீனாவில் வூகாங் மாவட்டத்தில் ஏற்பட்டது.


2. கொரோனா தொற்று எப்படி ஏற்படுகிறது?

........கொரோனா தொற்றுக் கண்டவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் அவர்களிடமிருந்து வெளிச்சிதறும் திரவத் திவலைகளோடு கொரோனா வைரஸும் வெளியேறுகிறது. இது நேரிடையாக எதிரிலிருப்பவர்களின் கண், மூக்கு, வாய் வழியே உடலுக்குள் புகுந்து தொற்று உண்டாகிறது.

அல்லது கொரோனா தொற்று உள்ளவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் வெளிப்படும் வைரஸ் கலந்த திரவத் திவலைகள் சுற்றுப் புறங்களில் உள்ள பொருள்கள் மீது படிந்து விடுகின்றன. இந்தப் பொருள்களைக் கையாள்பவர்கள் தங்கள் கைகளைச் சுத்தம் செய்து கொள்ளாமல் முகங்களைத் தொடுவதால் தொற்று உண்டாகிறது. தொற்று கண்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை அப்படியே பயன்படுத்துவதாலும் தொற்று ஏற்படுகிறது.

தொற்று உள்ளவர்களின் மலத்தின் மூலமும் வைரஸ் வெளியேறுகிறது. சுத்தப்படுத்தாத கழிவறைகளைப் பயன்படுத்துவது, கழிந்தபிறகு கைகளைக் கழுவாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் வைரஸ் தொற்றை ஏற்படுத்துகிறது.


3. கொரோனா வைரஸ் நம் உடலில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?

........சிலருக்கு, தொற்று ஏற்பட்டிருந்தாலும் நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை.

வேறு சிலருக்கு மிதமான அறிகுறிகள் உண்டாகின்றன. அவையாவன; தொண்டை வலி அல்லது எரிச்சல், காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல் வலி. இத்தகைய பாதிப்புகள் தற்காலிகமாகத் தோன்றி மறைகின்றன.

வேறு சிலருக்கு இந்த பாதிப்புகள் தீவிரத் தன்மையை அடைகின்றன. மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் பாதிப்புகள் உண்டாகின்றன. செயற்கை சுவாசம் கொடுக்குமளவு இதன் தீவிரம் இருக்கிறது. இதனால் உயிரையும் இழக்க நேரிடலாம்.

நுரையீரல் பாதிப்பைத் தவிர உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் செயலிழக்கின்றன. இவை மட்டுமல்லாது பசியின்மை, ருசி தெரியாமை, வயிற்று வலி, பேதி போன்ற குடல் சார்ந்த தொந்தரவுகளும் உண்டாகின்றன.

பாதிப்புகள் தீவிரமாகவும் விரைவாகவும் ஏற்படும் போது உயிரிழப்பு உண்டாகிறது.

இப்படி ஒரே நோய்க் கிருமி மனித சமூகத்தில் வேறுபட்ட பாதிப்புகளை உண்டாக்குவது நோய் வீச்சு என்றழைக்கப்படுகிறது. நோய் வீச்சு எப்படி இருந்தாலும் இவர்கள் எல்லோருமே நோய்த் தொற்றைப் பரப்பக் கூடியவர்கள்தாம்.

4. கொரோனா தொற்றை எப்படி கண்டறிவது?

........அரசு மருத்துவமனைகளிலும் சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. அங்கு சென்று பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் கொரோனா தொற்றைக் கண்டறியலாம்.

5. யாருக்கெல்லாம் கொரோனா தொற்று பரவும்?

........எல்லா வயதினருக்கும், ஆண் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா தொற்று பரவக் கூடும்.

6. கொரோனா தொற்று பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

........அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

........தேவையற்ற பயணங்களை விலக்க வேண்டும்.

.........கூட்டம் கூட்டுவதையும் கும்பலாக நெருங்கி இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

.........இருமல் தும்மல் வந்தால் வாயையும் மூக்கையும் மூடிக் கொள்ள வேண்டும். வெளியிடங்களில் உலாவுபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

........கண் வாய் மூக்கு-இவைகளை அழுக்குப் படிந்த கைகளால் தீண்டக் கூடாது.

.........சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

.........இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். புழங்கும் இடங்களை ஆல்கஹால் உள்ள கிருமிநாசினியைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.

........வீட்டில் சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் வரும் வகையில் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். குளிர் சாதனப் பயன்பாடு ஏற்புடையதல்ல.

........அடிக்கடி கையாளும் பொருள்களை (கைப்பிடி, ரிமோட் கண்ட்ரோல் கருவிகள் போன்றவை) கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

.........வெளியிலிருந்து வீட்டுக்கு கொண்டு வந்த பொருள்களை முடிந்த அளவு சுத்திகரிக்க வேண்டும் - துணி அல்லது முகக் கவசங்கள் என்றால் சோப்பு நீரில் ஊற வைத்துத் துவைத்து வெயிலில் காய வைக்கலாம். சோப்பு நீரால் க.ழுவுவது, கிருமி நாசினியைக் கொண்டு துடைப்பது, வெயிலில் உலர வைப்பது, ஒரு வாரம் வரை தனியாக எடுத்து வைப்பது என்று பல வித சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

.........சாப்பிடக் கூடிய பொருள்களை நீரில் கழுவி விட்டு நன்கு சமைத்துச் சாப்பிட வேண்டும். குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து அப்படியே எடுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

..........சத்தான ஆகாரங்களை சாப்பிட வேண்டும். புரதச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, துத்தநாகம், இரும்புச்சத்துள்ள பதார்த்தங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் நம் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

.........புகைப் பழக்கம், மதுப் பழக்கம் போன்ற தீய பழக்கங்கள் நம் உடம்பில் உள்ள நுரையீரல், இதயம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கின்றன. இதனால் நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆகையால் இந்தத் தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

...........இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கொலஸ்ரால் இவைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

........வீட்டுக்கு அண்மையில் மரங்களை வளர்த்துக் கொள்வது (குறிப்பாக வேம்பு) இந்த கொரோனா கால கட்டத்தில் மிகவும் இன்றியமையாத செயலாகும்.
.........வயதுக்கேற்ற வகையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

7. என் மகன் உள்ளங்கையில் சோப்பு போட்டு தேய்த்துக் கொண்டு வந்து விடுகிறான். இது போதுமா?

........போதாது. மணிக்கட்டு, விரலிடுக்கு, நகக் கண்கள் உட்பட இரு கைகளிலும் சோப்பு விரவியிருக்க வேண்டும். குறைந்தது இருபது நொடிகள் கைகளைத் தேய்த்துக் கழுவ வேண்டும். நாம் ̎பாபா பிளாக் ஷீப்" என்கிற ஆங்கில குழந்தைப் பாடலை அறிந்திருப்போம். "அம்மா இங்கே வா வா ̏ என்கிற தமிழ் குழந்தைப் பாடலும் நமக்குத் தெரிந்திருக்கும். மனதுக்குள் இந்த குழந்தைப் பாடல் ஏதேனும் ஒன்றை இரு முறை மனனம் செய்து கொள்கிற நேரம் இருபது நொடிகளுக்குச் சமமாகிறது.

8. பொதுவாக, எப்பொழுதெல்லாம் கை கழுவ வேண்டும்?

........வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் நுழையுமுன் கைகளையும் கால்களையும் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். கை கழுவிய பின்னர் முகத்தையும் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். முகம் கழுவிய பின்னர் இன்னொரு முறை சோப்பால் கை கழுவ வேண்டும்.

கழிவறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவ வேண்டும். மேல் நாட்டு பாணியில் அமைந்த கழிவறை என்றால் மூடி போட்டு மூடிய பிறகே நீர் பீச்ச வேண்டும். மூடியின்றி நீர் பீச்சினால் அந்த விசைக்கு நுண்கிருமிகள் எழும்பி நம் உடலுக்கோ அல்லது கழிவறை முழுக்கவோ பரவக் கூடும். இந்திய முறைப்படி அமைந்த க.ழிவறைகளைப் பயன்படுத்துவது கொரோனாத் தொற்றுள்ள இந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருக்கும்.

வெளியிலிருந்து வீட்டுக்கு கொண்டு வந்த பொருள்களை கையாண்டு முடித்தவுடன் கை கழுவ வேண்டும். பொருள்களை அடுக்கிக் கொண்டிருக்கும் வேளையில் கைகளை முகத்தருகே கொண்டு செல்லக் கூடாது.

சமைப்பதற்கு முன்னும், பரிமாறுவதற்கு முன்னும் சாப்பிடுவதற்கு முன்னும் கை கழுவ வேண்டும்.

குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் – இவர்களைப் பராமரிப்பதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும்.

தண்ணீர் கிடைக்காத சமயங்களில் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

9. சமூக இடைவெளி என்கிறார்களே அது என்ன?

.........வெளியிடங்களில் யாரிடம் தொற்று இருக்கிறது என்று நம்மால் கணிக்க இயலாது. நாம் நம் கைகளை பக்கவாட்டிலோ முன் பக்கத்திலோ நீட்டினால் நம் விரல் மேல் அடுத்தவர் விரல் படாத தூரம் நமக்குப் பாதுகாப்பான தூரமாகிறது. அதாவது பிறரிடமிருந்து கிளம்பும் வைரஸ் இரண்டு மூன்று அடிகளுக்குள்ளாகவே படிந்து விடும். அதைத் தாண்டி நாம் இருந்தால் நம் மீது அது படிகிற வாய்ப்புக் குறைகிறது.

10. முகக் கவசம் அணிவது பிறரிடமிருந்து நம்மைக் காப்பாற்றுகிறதா?

.......முகக் கவசம் அணிவதால் நம் உடலிலிருந்து தொற்று அடுத்தவருக்குப் பரவாமல் தடுக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொருவரும் முகக் கவசம் அணியும் போது தொற்றுப் பரவல் கணிசமாகக் குறைகிறது.

11. தொற்று வந்து விட்ட பிறகு இந்த தடுப்பு முறைகள் …?

........இந்த தடுப்பு முறைகள் தொற்று வந்து விட்டாலும் அது தீவிர நோயாக முற்றுவதைத் தடுக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாத இந்த சூழலில் இந்த தடுப்பு முறைகள்தாம் ஆபத்தை நீக்கும்.

12. ஹெச்ஐவி தொற்று உள்ளவர்களுக்கு வெகு எளிதில் கொரோனா தொற்று எற்படுமா?

........ஹெச்ஐவி தொற்று உள்ளவர்களின் சிடி 4 செல்கள் எனப்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் எண்ணிக்கை சரியாக இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கும் ஹெச்ஐவி தொற்று இல்லாதவர்களுக்கும் தொற்றுப் பரவலில் வித்தியாசம் காணப்படுவதில்லை. குணமாகும் சதவீதத்திலும் வித்தியாசமில்லை. பொதுவாக விடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களே இவர்களுக்கும் பொருந்தும்.
சிடி 4 செல்கள் குறைவாக இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

13. இன்னும் யார் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

........பத்து வயதுக்குட்பட்டோர், அறுபது அல்லது அதற்கு மேல் வயதானவர்கள், கர்ப்பிணிகள், ஊட்டச்சத்துக் குறைந்தவர்கள், சுவாசக் கோளாறு அல்லது இதயக் கோளாறு உள்ளவர்கள், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தமுள்ளவர்கள், புற்று நோயாளிகள், சிறு நீரக நோயாளிகள் ஆகியோர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

தொற்று ஏற்பட்டிருப்பதை ஆரம்ப நிலையிலேயே அறிந்து கொள்வதும், தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதும், தனித்திருப்பதும், நோயின் தீவிரத்தை நன்கு குறைக்கிறது.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (26-Aug-20, 3:01 pm)
பார்வை : 53

மேலே