அன்பு செய்யுங்கள்
அன்பு செய்யுங்கள்...
*****
சில சமயங்களில்
தவறு செய்வோம்...
பல சமயங்களில்
அப்படி நினைத்துக் கொள்ளப்படுவோம்...
இரண்டு நாட்களுக்கு முன்பு
எங்கள் நண்பர்களுக்குள்
சிறிய அல்லது பெரிய சண்டை.
நான் உண்மையில்
தவறு செய்தேனா...
இல்லை,
அப்படி நினைத்துக் கொள்ளப்பட்டேனா...
தெரியவில்லை.
எனக்கு
ஒன்று மட்டும் தெரிந்தது...
சண்டைகள்
என்பவை
எதிர்கால இழப்புகள்...
இந்த சண்டையிலும்
எனக்கு தெரிந்தது,
நான் இழக்கப் போகிறேன்
அல்லது
நீ இழக்கப் போகிறாய்...
அதிர்ஷ்டவசமாக
அல்லது
துரதிர்ஷ்டவசமாக
அப்படியெல்லாம்
எதுவும் நடக்கவில்லை...
வருத்தம் தெரிவித்தது
ஒர் உயிர், மறுநாள்..
உன்னை வருத்தப்பட வைப்பது
என் நோக்கமல்ல...
ஆனால்
நீ வருத்தப்பட்ட நேரம்தான் தவறு
என்றேன்.
ஏன்....?
இன்று தெரிவித்த வருத்தத்தை
நேற்றே சொல்லியிருந்தால்
இந்த வருத்தத்திற்கே அவசியமில்லை....
சண்டை ஆரம்பிப்பதற்கு
முன்பே தெளிவாக பேசியிருந்தால்
சண்டைக்கே இடமில்லை...
இப்போது
இவ்வளவு தெளிவாக
பேசும் நீ,
நேற்றே இதை கேட்டிருக்கலாம்...
எனவே
நீ பேசுவது அல்லது உன் வருத்தம்
என்பது
தெரிவிக்கப்பட்ட நேரம் தவறு.
என்ன புரிந்ததோ
என்ன இழவோ....
எனக்கு ஒன்று
தெளிவாக புரிந்தது...
நாளை காலையில் உயிரோடு இருப்போம் என்று சர்வநிச்சயமாக
யாராலும் சொல்ல முடியாது.
ஒருவேளை
அப்படி இல்லாமல் போய்விட்டால்,
இந்த சண்டைக்கும் அர்த்தமில்லை..
எதற்கும் அர்த்தமே இல்லை...
புரியல...
என
சந்தேகம் கேட்கப்பட்டது...
இன்று
இந்த இடத்தில் சண்டை போட்டு கொள்கிறோம்...
ஆனால்
இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நாம் சந்தித்து கொள்வோமா என்பது கூட தெரியவில்லை.
வாழ்க்கையின் கோர சுழலில் சிக்கி எங்கோ ஒரு திசையில் இருப்போம்...
ஒரு வேளை...
ஒரு வேளை, ஒன்றாக இருக்கிறோம் என்றே வைத்துக்கொள்வோம்.
இன்னும் எத்தனை வருடங்களுக்கு...?
ஒரு 50 வருடங்களுக்கு பிறகு,
இந்த பூமியில் நாம் வாழ்ந்த சுவடே இல்லாமல் மறைந்து போயிருப்போம்...
நம் சண்டைகளும்
நம் விரோதங்களும்
எங்கே போயிருக்கும்...?.
யாருக்குமே தெரியாது...
எனக்கும் தெரியாது..
செத்துப் போவதற்கு
சில வினாடிகளுக்கு முன்பு
நிச்சயமாக நினைவிழந்து விடுவோம்...
ஆனால் எப்போது செத்துப் போவோம் என்று தெரியாது.
எனவே தான்
சொல்கிறேன்...
வாழ்வு குறுகியது...
நினைவுகள் நன்றாக இருக்கும் போதே,
அன்பு செய்யுங்கள்...
அன்பு செய்யுங்கள்...
✍️கவிதைக்காரன்.