நினைவின் பிடியில் நான்

நீலவானில் தனித்திருக்கும் நிலவு
துரத்திவரும் மேகங்களாய்
உன்நினைவுகள் துரத்த
களைத்த இதயத்தோடு
கடலலையில் காலயரும் நான்!

அறிவிப்பின்றி வரும் புயலாய்
அர்த்தமின்றி வரும் உன் கோபங்கள்
கிழிந்த பாய்மரக்கப்பலாய்
கரைசேர தத்தளிக்கும்
என் நெஞ்சம்!

ஊடலின் கிழிசலை
காதல் கொண்டு
நீ நெய்ய...
இதயத்தின் சுவரெங்கும்
காதல் தைத்த ரணங்கள்...!

அன்று
கரம்கோர்ந்து கடலலையில்
பாதம் நனைய விளையாடினோம்
ஒன்றாய் கரையேற
விளையாட்டாய் பாத சுவடுகளை
கரையோரம் நீ விட்டுச் சென்றாய்...

இன்றாவது
உனைத் தொடர
மாட்டோமாவென கரையேற
துடிக்கும் அலைபோல்
துடிக்கும் என்னிதயத்தில்....


தைத்த காதல்
விழிவழியே நீராய்
எட்டிப் பார்க்க...
துரத்தும் உன்நினைவின்
பிடியில் முழுமையாய் நான்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (23-Nov-21, 1:48 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 1819

மேலே