யாரே நமநெய்யை நக்கு பவர் - பழமொழி நானூறு 35

இன்னிசை வெண்பா

தமனென் றிருநாழி ஈத்தவ னல்லால்
நமனென்று காயினும் தான்காயான் மன்னே
அவனிவ னென்றுரைத் தெள்ளிமற் (றி)யாரே
நமநெய்யை நக்கு பவர். 35

- பழமொழி நானூறு

பொருளுரை:

தம்முடைய சுற்றத்தானென்று கருதி, இருநாழி அரிசியைக் கொடுத்தவன் வெகுளினும் வெகுள்வதன்றி, சுற்றத்தான் என்பது கருதி அவன் என்றும் இவன் என்றும் இகழ்ந்து கூறி நகையாடி நன்றியறித லுடையான் மனவெறுப்புக் கொள்ளான்;

மந்திரங் கூறிக் குண்டத்திலிட வைத்த ஆனெய்யை நக்கிச் சுவை பார்ப்பார் யாவர்? ஒருவருமிலர்.

கருத்து:

ஒருவன் தனக்கு உதவி செய்தவன் காய்வானாயினும் தான் காய்தலை யொழிக என்றது இது.

விளக்கம்:

'காயினும்' என்றாராயினும், 'தமனென்று இருநாழி ஈத்தவன்' என்றலின், காய்தல் ஒருதலை யன்றாம். அவன், இவன் என்பன இகழ்ச்சிக் குறிப்பாயின.

நம என்பது மந்திரத்தின் ஈற்றில் நிற்பது. வேள்விக்கிடுவான் வைத்த நெய்யை யாரும் சுவை பார்த்தல் இல்லாதவாறு போல், உதவி பெற்றார் தமக்குதவி செய்தாரைக் காயக் கடவரல்லராம்.

'யாரே நமநெய்யை நக்குபவர்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-21, 3:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே