அறங்கரை நாவான் ஆய்மயிலார் சீர்ஆம் – இன்னிலை 20

நேரிசை வெண்பா

அறங்கரை நாவானா மாய்மயிலார் சீரில்
லறங்கரையா நாப்ப ணடைவாம் - புறங்கரையாத்
திண்மை நிலையின் உயர்புலத்திற் சேர்வாமீண்(டு)
எண்ணிலைக்(கு) உய்வா யிது. 20

– இன்னிலை

பொருளுரை:

அறங்கூறும் நாவினால் ஆராய்ந்த மயில்போன்ற மகளிருடன் கூடிவாழும் சிறப்பு ஒருவனுக்கு உண்டாகும்,

இல்லறத்தின் முடிவாக நடுவுலகம் (பொன்னுலகம்) அடைவது கூடும்,

புறத்தொழுக்கிற் சென்று தளராத வலிமையான நிலையால் உயர்ந்த முத்தியாகிய இடத்திற்குச் சேர்வதும் கூடும்,

ஆதலால், இவ்வுலகத்தில் ஆராய்ந்த நிலைகட்கு எல்லாம் செலுத்துகின்ற வழி, இவ்வழியேயாம்.

கருத்து:

இல்லறமே சுவர்க்கத்துச் செல்லுவதற்கும், முத்தியுலகம் அடைவதற்கும் வழியாகும். ஆதலால், மக்கள் யாவரும் இல்லறத்தை நல்லறமாகக் கொள்ளல் வேண்டும்.

விளக்கம்:

உலகத்தார்க்கு அறவுரை வழங்கும் அறிவுடையோனை மகளிர் மணந்து வாழ விரும்புவர் என்ற கருத்தினால் அறம் கரைநாவான் ஆம் என்றார்.

கல்வியறிவில்லாத கயவனை மணந்து இல்லறம் நடத்தக் கன்னியர் எண்ணார் என்பது கருத்து.

இல்லறம் இனிது நடத்தி அறம் புரிந்து வாழ்வார் சுவர்க்கஞ் செல்வது உறுதியாதலால் "நாப்பண் அடைவு ஆம்"

நாப்பண் - நடு. இது முத்தியுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் நடுவில் இருப்பது கருதி, நாப்பண் எனப்பட்டது அன்றியும் மண் விண் பாதலம் என்ற முறையில் நடுநற்றலாலும் நாப்பண் என்பது பொருந்தும்.

புறங்கரையாத் திண்மை நிலையாவது; இல்லறத்திலிருந்து பரத்தையர் முதலிய பிற மகளுடன் கூடித் தகாத செயல் புரியாமல் தன் மனைவியையன்றிப் பிற மாதரை மனத்தானும் நினையாது வாழும் வலிய நிலைமை இந்நிலை தவத்திற்கொத்த நிலையாம். இதனையே வானப் பிரத்தம் என்பர் வடநூலார்.

மனைவியும் தானும் வனமடைந்து நோற்றல் என்பர் தமிழர். இந்நிலையினிற்பவர் முத்தியுலகஞ் சேர்வர் என்பது நூற்றுணிபாதலின் "உயர்புலத்திற் சேர்வு ஆம்" என்றார். உயர்புலம் - உயர்ந்த இடம், இது முத்தியுலகத்தை யுணர்த்திற்று.

இல்லறத்திருப்பவன் சுவர்க்கமும் அடையலாம் பின் முத்தியுலகத்தை அடையலாம். எவ்விடத்திற்கும் செலுத்துகின்ற வழியாக இல்லறம் இருக்கின்றது என்பார் "உய்வாய்" என்றார். வாய் - வழி உய்க்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-22, 9:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே