முறைமைக்கு மூப்பிளமை இல் - பழமொழி நானூறு 93

நேரிசை வெண்பா

சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலைக் கழிந்ததன் பின்றையும் – மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல். 93

- பழமொழி நானூறு

பொருளுரை:

அறிவு நிரம்பிய அமைச்சர்கள் பல முன்னுதாரணங்களை மிகைப்படுத்தியே கூறி இச்சம்பவம் பெருங்குற்றமல்ல என்று மறைத்து, அதற்கு சாத்திரங்களில் மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலை மறைக்கவும், அன்றிரவு கழிந்த பின்னர் முன்னாள் பசுவின் கன்றின் மேல் தனது தேரைச் செலுத்தினவனை அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்.

ஆகையால், செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி, இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை.

கருத்து:

முதுமை இளமை கருதி நீதி கூறலாகாது.

விளக்கம்:

'சாலமறைத்து' என்றது இதுபோன்ற பழைய நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறி தொன்றுதொட்டு வந்தமையால் இது பெருங் குற்றமல்லவென்று கூறுவது.

'ஓம்புதல்' என்றது அந்தணர்கள் கூறுகின்ற முறைப்படி பொன்னால் பசுவின் கன்று செய்து அவர்க்கே அளித்தல் இதற்குத் தீர்வாகும் என்று கூறி அத்தீவினையினின்றும் அவரைப் பாதுகாப்பது.

'கை கரப்பவும்' என்றது மகனைக் கோற நினைத்த நினைவை மறைக்கவும் என்பதாம்.

'சால மறைத்தோம்பி' என்றது கரத்தலுக்கு ஏதுவாயிற்று.

கழிந்தது என்றது அரசன் இரவற்ற துன்பத்தையும், விடுதலை நோக்கிய வேட்கையையும் உணர்த்தும்.

தந்தைக்கு ஏற்ப மகனென்று சொல்லாமல் கன்றூர்ந்தானை என்றார்.

மகன் செய்த தீமை தந்தை உளத்தில் நின்று கொதித்தலின் மகனெனக் கூற மனம் இயையாமையின். 'தந்தையும்' என்னும் முற்றும்மை ஊர்தலின் அருமை தோற்றுவித்து நின்றது.

'முறைமைக்கு மூப்பிளமை இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-22, 8:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே