பெண்மை வியவார் வீடில் புலப்பகையி னார் - நீதிநெறி விளக்கம் 85
நேரிசை வெண்பா
பெண்மை வியவார் பெயரும் எடுத்தோதார்
கண்ணொடு நெஞ்சுறைப்ப நோக்குறார் - பண்ணொடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்
வீடில் புலப்பகையி னார் 85
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
புலன்களுக்குப் பகைவராகிய கெடுதலில்லாத துறவிகள் பெண்மை என்னுந் தன்மையைப் புகழ்ந்து கூறார்; பெண்ணென்னும் பெயரையும் எடுத்துரையார்; நெஞ்சில் அவர்கள் உருவம் பதியுமாறு கண்களால் பெண்களைப் பார்க்க மாட்டார்கள்;
தம்மை வயப்படுத்தும் பொருட்டு அவர்கள் இசையோடு பாடும் பாடல்களுக்கும் செவி கொடார்: குணமற்றனவான பிற செயல்களையும் பாராட்ட மாட்டார்கள்.
விளக்கம்:
இச் செய்யுள் முதல் ஆசிரியர் இந்நூல் முடிவு வரை துறந்தோர் தன்மை கூறுகின்றார்.
கருத்து:
ஐம்புலனும் வென்ற துறவிகள் சிற்றின்பத்திற்குக் காரணமான காரியங்களில் ஈடுபடாதிருப்பர்.