சேற்றுள் வழாமைக் காத்தோம்பி வாங்கும் எருது எழாமைச் சாக்காடு எழல் - பழமொழி நானூறு 155

நேரிசை வெண்பா

ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத்து
ஆற்றாதார் வேந்தனை நோவது - சேற்றுள்
வழாமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங்(கு)
எழாமைச் சாக்கா(டு) எழல். 155

- பழமொழி நானூறு

பொருளுரை:

மிகவும் போர்த்தொழிலைச் செய்து வெற்றியை உண்டாக்கினார் வாளாயிருப்ப, போரிற் சென்று ஒருவினையும் செய்யாதார் தமக்குச் சிறப்புச் செய்திலனென்று பலவாறுரைத்து அரசனை நொந்து கொள்வது,

சேற்றுள் வழுவி அகப்பட்டு வருந்தாது காத்து இழுக்கவல்ல எருது அங்கே எழுந்து செல்லாதிருக்க, அவ்வாற்றலில்லாத சகடம் எழுந்து செல்லுதலை யொக்கும்.

கருத்து:

வினைமாட்சி யில்லார் சிறப்புப் பெறுதல் இலர்.

விளக்கம்:

எருது நிற்க, சகடம் எழுந்து சேறல் பொருந்தாமை போல, அவர் பரிசிற்கெழுதல் பொருந்தாத தொன்றாம்.

'பலவுரைத்து' என்றது, அரசன் வீரர் திறம் அறியான் எனவும் அவர்க்குச் செய்யத்தகும் சிறப்புச் செய்ய அறியானெனவும், என்றிவை போற் கூறுவனவாம்.

'சாக்காடு' 'சாகாடு' என்றிருத்தல் நல்லது என்று கூறும் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு. அங்ஙனமே பொருள் கொள்ளப்பட்டது.

'சேற்றுள் வழாமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங்கு எழாமைச் சாக்கா டெழல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Aug-22, 9:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே