புத்தக கண்காட்சியில் நகைச்சுவை

வந்தவர்: சுஜாதா நாவல்கள் கிடைக்குமா?
புத்தக விற்பனையாளர்: அன்னக்கிளி சுஜாதாவா, பாடகி சுஜாதாவா, ரங்கராஜன் சுஜாதாவா?
வந்தவர்: எது இருந்தாலும் பரவாயில்லை
புத்தக விற்பனையாளர்: சாரி சார், எதுவுமே இல்லை
வந்தவர்: ???
***
வந்தவர்: சார், நம்ம லோக்கல் ஆளுங்க ஆங்கிலத்தில் நினைத்து தமிழில் எழுதிய புத்தகங்கள் ஏதாவது கிடைக்குமா?
புத்தக விற்பனையாளர்: நீங்களே அந்தமாதிரி ஒரு புத்தகத்தை போட்டு கொண்டாங்க. நான் வாங்கிக்கிறேன்.
வந்தவர்: ???
***
வந்தவர்: ஏங்க , ஆங்கில பெர்னார்ட் ஷாவும் நம்ம முன்னாள் ராணுவ தளபதி மெனக்ஷாவும் சேர்ந்து எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா?
புத்தக விற்பனையாளர்: ஒ, இருக்கிறதே.
வந்தவர்: புத்தகத்தின் பெயர் என்ன ?
புத்தக விற்பனையாளர்: அமித் ஷா
வந்தவர்: ???
***
வந்தவர்: தமிழில் நல்ல நகைச்சுவை புத்தகம் இருக்கிறதா?
புத்தக விற்பனையாளர்: யாருங்க இப்போல்லாம் நகைச்சுவை புத்தகம் படிக்கிறாங்க?
இதை கேட்டு வந்தவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்
புத்தக விற்பனையாளர்: ஏன் சார் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க?
வந்தவர்: நீங்க இப்போது சொன்னதே ஒரு அருமையான நகைச்சுவைதான்
புத்தக விற்பனையாளர்: ???
****
புத்தக விற்பனையாளர்: வாங்க ஆசிரியர் அய்யா! நீங்கள் இந்த புத்தக கண்காட்சியில் உங்கள் புதிய புத்தகம் ஏதாவது அறிமுகம் செய்து வெளியிடுகிறீர்களா?
ஆசிரியர்: இல்லை. பல புத்தக கடைகளுக்கு சென்று என்னை நானே அறிமுகம் செய்துகொண்டு, என் புத்தகத்தை வாங்குபவர் ஒருவர் கூட இல்லையா என்ற என் மனபுலம்பலை வெளியிட வந்திருக்கிறேன்.
புத்தக விற்பனையாளர்:???
***
வந்தவர்: என்ன சார் , எல்லா புத்தக கடையிலும் 10 முதல் 30 சதவிகிதம் வரை தள்ளுபடி தருகிறார்கள். நீங்கள்தான் மிகவும் குறைவாக 5 சதவிகிதம் தள்ளுபடி மட்டும் தருகிறீர்கள்.
புத்தக விற்பனையாளர்: ஏன் சார் வயித்தெரிச்சலை கிளறிவிடுகிறீர்கள். ஒவ்வொரு புத்தகத்திற்கும் 150 ரூபாய்க்கு குறையாமல் செலவு செய்து நானே வெளியிட்ட இருபது புத்தகங்களின் விலைகளும் 100 ரூபாய் மட்டும்தான். ஏற்கெனவே உள்ள ஐம்பது ரூபாய் நஷ்டத்துக்கு மேல் இன்னும் 5 சதவிகிதம் தள்ளுபடி கொடுத்து என் நஷ்டத்தை ஐம்பத்தைந்தாக உயர்த்திவிட்டேன்.இன்னும் தள்ளுபடி கொடுத்தால் நான் தள்ளுவண்டியில் என் புத்தகங்களை ஏற்றிக்கொண்டு பழைய பேப்பர் கடைக்குதான் எடுத்துச்செல்ல வேண்டும். இதனால் சாலையில் செல்பவர்கள் என்னை ஓரம் தள்ளும்படி சத்தமிடுவதையும் நான் கேட்கவேண்டியிருக்கும்.
வந்தவர்: ???
***
வந்தவர்: என்ன அநியாயம் சார், விவரமே அறியாத பல பேர்கள் புத்தகம் போடுகிறேன் என்று எதையெதையோ எழுதி தள்ளி புத்தகமாக போடுகிறார்கள். ஆனால் உங்களைப்போன்ற நல்ல கருத்துக்கள் கூறும் எழுத்தாளர்கள் புத்தகங்கள் ஏன் அதிகமாக விற்பனை ஆவதில்லை?
எழுத்தாளர்: விவரமே அறியாத பலரும் புத்தக காட்சியில் வந்து புத்தகம் வாங்கவேண்டும் என்பதற்காக புத்தகங்கள் வாங்குகின்றனர். அப்படி என்றால் அவர்கள் வாங்கும் புத்தகங்களும் அப்படிப்பட்டதாகத்தானே இருக்கும். இப்போது உங்களுக்கு விவரம் புரிந்ததா?
வந்தவர்: ???
***
வந்தவர்: '100 வருடங்கள் உயிர்வாழ 100 ஆலோசனைகள்' என்கிற புத்தகம் எழுதிய ஆசிரியர் வயது என்ன? புத்தக விற்பனையாளர்: பதினாறு
புத்தக விற்பனையாளர்: நான் அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கையை கேட்கவில்லை. அவரது வயதைத்தான் கேட்டேன்.
புத்தக விற்பனையாளர்: நானும் அவரது வயதைத்தான் சொன்னேன். அவர் வயது ஸ்வீட் சிக்ஸ்ட்டின். அதாவது பதினாறு வயது.
வந்தவர்:???
***
வந்தவர்: 'என் வாய் படும் பாடு' என்ற புத்தகம் எதை பற்றி எழுதப்பட்டது?
புத்தக விற்பனையாளர்: சின்ன வயதில் இந்த புத்தக ஆசிரியர் கணக்கு வாய்ப்பாட்டினை கற்றுக்கொள்ள எவ்வளவு அவதிப்பட்டார் , எவ்வளவு முறை கணக்கு ஆசிரியர்களால் அடக்கி ஒடுக்கி அடிக்கபட்டார், அதிலும் குறிப்பாக ஏழாம், ஒன்பதாம், பதிமூன்றாம், பதினான்காம், பதினாறாம் வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்து முடிப்பதற்குள் அவர் பட்ட பாட்டை உரைநடையாகவும் பாட்டாகவும் பத்தொன்பது வாய்ப்பாடுகளாய் பிரித்து, கடைசியில் ஒன்றாம் வாய்ப்பாட்டைபோல் எதுவும் வராது என்பதை புத்தகத்தின் முடிவில் மிகவும் இரத்தின சுருக்கமாக , சுருக்கென்று ஊசி ஏத்தியது போல எழுதி உள்ளார்.
வந்தவர்:???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (9-Aug-22, 9:32 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 141

மேலே