நிலாப்பெண்ணே

பால் நிலவே...!
என் அன்பு தோழியே...- அவன்
பால் விழுந்த நினைவை
என்ன செய்வேன்?
சொல்லடி என் செல்லமே..

அவன் பார்வை தாளாமல்தான்
நான் மண் பார்த்து நின்றேன்.
மற்றவர்கள் கூறினார்கள்
அது வெட்கம் என்று...
அச்சம்..நாணம்...பயிர்ப்பு...என்று
உண்மையில் அந்த பார்வை
என் உயிர் நாடியையே
ஆட்டிவிட்டது.
அது அச்சமா?...நாணமா?
நானறியேன்.
மண் பார்த்து நின்றது
மட்டும் உண்மையடி தோழி...

உன் காதை கொண்டா
ரகசியம் ஒன்று சொல்கிறேன்.
உன்னிடம் மட்டும்தான் சொல்கிறேன்.
ரகசியம் காப்பாயல்லவா?
யாரிடமும் சொல்லிடமாட்டாயே?
தலையில் அடித்து சத்தியம்
செய்யடி செல்லமே..
அவள் தலை
ஜொலி ஜொலித்தது
நிலவொளியில்.
அவனை விட்டு தனிமையில்...
என் ராஜாங்கத்தில்....
முந்நூற்றுஅறுபது கோணத்திலும்
எட்டுத் திக்குகளிலும்
அவன்தான் நிறைந்து இருந்தானடி..
நேரில் பார்த்தவுடன்
மெழுகாய் உருகி போனேனடி.

அவன்
நெருங்கி வந்து என்னை
அணைக்கையில்...
அவன் விட்ட வெப்ப மூச்சில்
அந்த ஆண்மையின் சூட்டில்
என் பெண்மையின் குளிர்ச்சி
அணைந்தே போனதடி.
அவன்
கவிதையென்று
உளறும் உளறல்கூட
காவியமாய் நெஞ்சில்
நிலைத்ததடி..
நீயம் பெண்தானே
உனக்கு இந்த அனுபவம் இல்லாயா?
தெரியுமடி கள்ளியே
உன் காதலன் கதிரவன்
அணைக்கும்போது நீதான்
காணாமலே போய்விடுகிறாயே...

எது எப்படியோ...நான் செய்வது
தப்போ ...ரைட்டோ...
நிலா பெண்ணே
நினைவை நிறுத்தி
வைக்க முடியலடி - பூட்டிய
விலங்கை கழட்டி
வைக்க முடியலடி - நெஞ்சிலூறும்
உணர்வை மறைத்து
வைக்க முடியலடி....
வயசு கோளாரென்று
உலகம் தூற்றுகிறது.

அதனால்தான்
அழும் பக்கத்து வீட்டு
குழந்தையை வாரி எடுத்து
அவனை கொஞ்சுவதுபோல்
கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்.
அது அவனுக்கும் தெரியும்.
எப்போது என்னை? என்று
அவன் கிண்டலாய் சிரிக்கும்போது
ஆசை...தோசை...அப்பள வடை...
என்று வெறுப்பேற்றித் தொலைகிறேனடி..
அவன் பிரிந்தபின்...
நீ வானில் வந்த பின்
அதே நினைவால்
பித்து பிடித்து அலைகிறேனடி...
பித்தம் எப்போ தெளியுமடி? - இந்த
கிறுக்கு எப்போ தீருமடி?
சொல்வாயடி
என் நிலாப்பெண்ணே ...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (24-Aug-22, 8:26 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 98

மேலே