603 தொழுதுணர்த்தி மக்களைத் தொழுதுழைக்கச் செய்க - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 3

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

முத்தொழிற் பரற்றொழு முறையு மன்னவன்
கைத்தொழிற் பொருளிலக் கணமுந் தத்தமக்
கெத்தொழி லெவ்வொழுக் கியைந்த வாகுமோ
வத்தொழில் வண்மையு மறைக பாலர்க்கே. 3

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

இறைவனைத் தொழுது இன்பமுறும் மக்கட் பெற்ற ஈன்றோர்களே! உங்கள் மக்கட்குப் படைத்தல், காத்தல், துடைத்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்வித்தருளும் முழுமுதல்வனை நாற்பொருளும் நன்கினிது கைகூட முறையே காலை நண்பகல் மாலை நள்ளிரவு என்னும் நான்கு வேளைகளிலும் தவிராது கண்ணல், வாழ்த்தல், கைகூப்பல் என்னும் தொழுகையினைச் செய்யுமாறு தொழுது காட்டிக் கற்பிப்பீர்களாக.

ஆண்டவன் ஆக்காது ஆக்கியருளிய உலகியற் பொருள்களின் தன்மைகளை உள்ளவாறு எடுத்து விளக்குவீர்களாக. அதன்வழி ஆண்டவன் அருள்திறம் அம்மக்கள் உள்ளத்தில் அழுத்தமாய்ப் பதியும். அம் மக்களுடைய முற்பிறப்பின் பழக்க வலியால் வளர்ந்து விளங்கும் இயற்கை அறிவுக்கியைந்தவாறு தொழில்களையும் நடைமுறைகளையும் மேற்கொள்ளுமாறும் அத்தொழில்களின் வளங்களையும் அறிவித்து முயற்சியில் முற்படுத்துவீர்களாக.

முத்தொழில் - படைத்தல், காத்தல், துடைத்தல், பரன் - கடவுள். தொழுகை - பூசை.
இலக்கணம் - தன்மை. வண்மை - வளர்ப்பம். அறைக - சொல்லுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-23, 3:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே