உலக கவிதை தின சிறப்பு கவிதை

உலக கவிதை தின சிறப்பு கவிதை....

கவிதை ஒரு விதை....

படைப்பு #கவிதை_ரசிகன்
குமரேசன்

கவிதை....

வார்த்தைக்கற்களை
சிந்தனை உளியால்
சிலை வடிக்கும் சிற்பி...

எழுதுகோல் தூரிகையால்
கற்பனைச் சுவற்றில்
எண்ணங்களை
வண்ணங்களாக்கி
வரையும் ஓவியன்....

சமுதாய அவலங்களை
கைகள் இல்லாமலேயே
சுட்டிக்காட்டும் சுட்டுவிரல்..... !

அன்று
விடுதலைப் போராட்டத்தில்
பாரதியார் கவிதைகள்
செய்த போராட்டம்
என்னவென்று ?
இன்றும்
வரலாறு சொல்லிக்
கொண்டுள்ளது.................

தாய்மொழி தமிழ்
தலை நிமிர்ந்து நிற்பதற்குப்
பாரதிதாசன் கவிதைகள்
செய்தப் புரட்சி என்னவென்று
நாளைய வரலாறு
சொல்லிக் கொண்டிருக்கும்....

தாயும் பிள்ளையும் போல்
கவிதையும் காதலும்
தொப்புள் கொடி இல்லாத
ஒரு சொந்தம்......

காதலுக்காக கவிதையா?
கவிதைக்காக காதலா ?
பட்டிமன்றம் வைத்தாலும்
யாராலும்
தீர்ப்பு சொல்ல முடியாது...

தன்னை ஈன்றவனுக்கு
கவிஞன் என்ற பட்டத்தை
பெற்றுத் தந்து
பெற்றவர்களை
பெருமைப்படுத்தும்
அதிசயப் பிள்ளை........

காலம்
அன்றாட நிகழ்வுகளை
பதிவு செய்யுது வைக்கும்
நாட்குறிப்பேடு.....

அநீதிகள் செய்யும்
அதிகார வர்க்கத்தின்
கன்னத்தில் அறைந்து
தவறுகளை
சுட்டிக்காட்ட
சராசரி மனிதனுக்கு
முளைத்த மூன்றாவதுக் கை....

அமுதத்தை விட
இது ஒரு படி மேலானது
அமுதத்தைக் கூட
உண்டால்தான்
சாகா வரம் கிடைக்கும்
இதை உருவாக்கினாலேயே
சாகா வரம் கிடைத்துவிடும்.....

இது தனியாக
இருக்கும்போதோ
பழம் போன்றது.....
இசையோடு சேரும்போது
பாலில் விழுந்த
பழம் போன்றது....

எல்லோருடைய
வீட்டுக் கதவையும்
தட்டுவதில்லை
ஒரு சிலர் வீட்டுக்
கதவை மட்டுமே தட்டும்
அதிர்ஷ்டம்....

பலரது கவிதைகள்
காகிதத்தில்
எழுத்துக்களால்
எழுதுவதால்
காலக் கரையான்
அரித்து விடுகிறது....

சிலரது கவிதைகள்
அழிக்க முடிவதில்லை
ஆம் .......!
கல்லில் எழுதிய
கல்வெட்டா இருப்பதால்....

இன்று பலரும்
கவிதை முத்துக்கு
ஆசைப்பட்டு
சிந்தனைக் கடலில்
மூழ்குகின்றனர்
ஒரு சிலர்தான்
முத்தோடு வருகின்றனர்
பலர் சங்கோடு தான்
வருகிறார்கள்......

இன்றையக்கு
எழுதி வாழ முடியாது
எழுதுவதால் வாழ முடியும்...

♥கவிஞர்களுக்கும் கவிதை ரசிகர்களுக்கும் உலக கவிதை தின நல்வாழ்த்துக்கள்....♥

கவிதை ரசிகன் குமரேசன்...

எழுதியவர் : கவிதை ரசிகன் (21-Mar-24, 8:03 pm)
பார்வை : 15

மேலே