நகரவாசி

அடுக்குமாடி கட்டிடத்தில்
அடைபட்ட மூச்சுக் காற்று
எரியத்தான் செய்கிறது
ஏ.சி யை போட்டால் கூட

விளையாட்டு பாடத்தை
வீதியில் எறிந்துவிட்டு
கணக்கு பாடத்திற்கு
கல்லறை கட்டிவிட்டு
ஆணவத்துடன் சொல்லுவார்கள்
"அபாக்கஸ் உள்ளதென்று"

கோயில் திருவிழாவிற்கு
கோலாகலமாய் வந்திருந்த
பாட்டிகள் கூட வருந்துகிறார்கள்
"பேஷன் பரேட்" இல்லையென்று

முதன் முதலாய் "இ" போட்ட
மழலைகளின் மகிழ்ச்சியை
மனதுடனே கருக்குகிறது
"மல்டிமீடியா பாடங்கள்"

சிலுவையை எடுத்து
சிறகுகளில் வைக்கும்
சிந்தனைவாசிகள்

மரங்களின் உயிரை
மழுங்கச் செய்துவிட்டு
பறவைகளின் அழுகையை
பழக்கப் படுத்திவிட்டு
நாள் கழித்து சொல்லுகிறார்கள்
"நான்கு வழிப் பாதைக்கென்று"

பக்கத்து வீட்டுக்காரனை
பார்வையால் தொலைத்து
எதிர் வீடுகாரனை
ஏளனமாய் பார்த்து

இணையம் முலமாக
இங்கிலாந்துகாரனுடன் பேசும்
இந்த இளமை பட்டாளம்

கால்களை விற்று
காலனிகளை வாங்கும் - இந்த
நகரவாசிகள்
நன்றி இல்லாமல் சொல்லுகிறார்கள்
"நகரம் உங்களை வரவேற்கிறது" என்று ....


எழுதியவர் : மு நாகராஜன் (21-Nov-11, 11:08 pm)
பார்வை : 345

மேலே