காஷ்மீரே!

துப்பாக்கி சத்தத்தில்
துயரம் சேமிக்கும்
என்
காஷ்மீரத்து தோழனே!

ரத்தம் என்பது
உயிரியல் உலகத்தின்
ஆணி வேர்.

கொசுக்களுக்கு
கொடுப்பதற்கே
இங்கே
ரத்தம் போதவில்லை.

பிறகு எதற்கு
வெடிகுண்டுகளோடு
விபரீத விளையாட்டு.

உதிரச் சொட்டுகளால்
ஒரு தேசத்தின்
வரைபடமா?

வெள்ளை பனி படர்ந்த
இந்த மலை நடுவே
குழலோசை கேட்க வேண்டும்.

தோட்டாக்கள் துப்புகின்ற
துப்பாக்கி
துவாரத்தில்
தும்பை பூ மலர் கொத்து
பூக்கவேண்டும்.

துப்பாக்கிபிடிக்கின்ற
கைகளிலே
துருமட்டும் பிடிக்க வேண்டும்.

காஷ்மீரே!
முள்ளில்லா ரோஜாவின்
முகவரியாய்
நீ மாறவேண்டும்.

உன் மூடுபனி குளிருக்காய்
மீண்டும்
உலகம் உன்னை
தேடவேண்டும்.

முழு நிலவு
போட்டு வைக்கும்
உன் முகத்தின் பேரழகை
ஒரு
சிட்டுக் குருவி போல
நான் வந்து
சிறகசைத்து ரசிக்கவேண்டும்.

எழுதியவர் : மோசே (30-May-12, 11:56 pm)
சேர்த்தது : மோசே
பார்வை : 151

மேலே