சிந்தைத் தமிழ்

சிந்தைத் தமிழ் மனிதராய்ப் பிறந்தோம் மண்ணிதிலே !
மறந்திட வேண்டும் பகைமையினை !
புனிதராய் ஆவது புன்னகையால் !
பொசுங்கிட வேண்டும் தீமையெலாம் !
இனிமை என்பது தமிழிசையாம் !
இனிவர வேண்டும் இயல் இசைகள் !
தனிமை என்பது நாடகமே !

தாயாம் தமிழும் நம் அருகில் !
அருகில் வந்தது அறிவென்றால்
ஆற்றிடலாம் பல செயல்களையே !
அருகில் உள்ள மருத்துவமும்
அவையும் எங்கள் கைகளிலே !
பெருவில் இராமக் காதைகளும்
பெற்றது தமிழின் பெருஞ்சிறப்பு !

தருவில் துளைக்கும் மரங்குத்தி (அதுபோல்)
மனதில் தைக்கும் தமிழ்ச்சத்தி !
தமிழின் சத்தி மிகப்பெரிது !
தரணியும் அதனை தெரிந்திடவே
குமிழாய் வந்திடும் காவிரியாய்
கொடுத்திடுவோம் நற் கவிகளையே !
அமிழும் தேனில் அத்தேனீ போல்
ஆழ்ந்திட வேண்டும் (தமிழ்)அமிழ்தத்தில் !
உமிழும் வேதச்சாகைகள் போல்
தமிழில் உண்டு பல சுவைகள் !

சுவையை அறியும் நா போல
சுற்றிட வேண்டும் மனம் தமிழில் !
அவையை அறிந்து பேசு என்றே
அறிவை உணர்த்தும் பல நூல்கள் !
எவைதான் இல்லை நம் மொழியில் !
எதற்கு அச்சம் நம் மனதில் ?
குவையாய் உண்டு தமிழ்ப்பண்கள் !
கொட்டிட வேண்டும் சந்தங்களை !

சந்தங்கள், பாக்கள் பல கொட்டி
செய்திட செய்வது நங்கடமை !
விந்தையாய் செய்திகள் பல சொல்லி
வளர்த்திடுவோம் நம் மக்களையே !
சிந்தையில் தமிழை ஏற்றிடவே
சொல்லிடவேண்டும் கவிதைகளை !
எந்தையும் தாயும் என் தமிழே !
ஏற்றிட வேண்டும் இவ்வெண்ணம் !

எழுதியவர் : நாகசுந்தரம், புதுடில்லி (3-Jun-12, 2:00 pm)
பார்வை : 383

மேலே