சாரலடிக்கும் நேரம்...!

நாளை வருகிறேன் என்ற உன் குரல்
ஆயிரம் கவிதைகளை தோற்கடித்து
புதிதாய் ஒன்றை விதைத்து சென்றது...!

உன் வருகை தெரிவித்த கைபேசி
எண்ணிட இயலா முத்தங்களை
அரைநொடி பொழுதில் பரிசாய் பெற்று
இயக்கம் மறந்து மவுனமானது...!

உன் ராஜ வீதியில் உலாவரும்
ஒற்றை ராணியாய் கர்வம் கொண்டு
இதழோர புன்னகை ஒன்றை படர விடுகிறேன்...!

கண்ணாடி கூட கண்டிருக்குமோ
என் பல்வரிசையை...
இன்று வீட்டில் அனைவருக்கும்
காட்சிப் பொருளாகி வியக்க வைக்கிறது...!

அய்யோ செல்லமே,
உன்னை திட்டி கடிதமெழுதினேனே...
நாளை அவையெல்லாம் உன்
ரகசிய தீண்டலில் வீரியமிழக்க போகின்றன...!

பாரடா, உன் பெயரை
பல லட்சம் முறை உச்சரித்து
உன் கிண்டல் பேச்சுகளில்
நெஞ்சுருகி கொஞ்சுகிறேன்...!

உன் வருகை அறிந்த நொடி, உனக்குள் நான் தொலைந்து,
உன் கவிதை வரி ஒன்றை களவெடுத்துச் சொல்கிறேன்
உன் நேசம் கொண்டு நான் நனையும் பொழுதெல்லாம்
“தூறல் ஏறியது என் வானம்”...!

கை விரித்து காத்தே கிடக்கிறேன்,
உன் சாரலில் நனையப்போகும் பொழுதுக்காய்...!

எழுதியவர் : காயத்திரி தேவி (15-Sep-12, 9:21 am)
பார்வை : 255

மேலே