சோதிடக் கிளி

நந்தவனம் நான் மறந்தேன்
சொந்த இனம் நான் இழந்தேன்

மரப்பொந்துதான்
எனக்கு மாளிகை
இது மணிக்கூண்டானாலும்
மரணச் சிறைதான்

மனிதர்க்கு நல்ல நேரம் காலம்
நான் காட்டுவேன்
எனக்கு யார் காட்டுவார்?

என் வாழ்க்கை
ஆயுள் கைதியை
சுதந்திர தினக் கொடியேற்ற
வைப்பது போலவே

சோதிடம் பார்ப்போரே பொறுப்பீர்
சீட்டெடுக்கும் வேளையில்
களைந்து களைந்து தேடுவதும்
ஒரு கணம் மெளனிப்பதும்
கூண்டிலிருந்து வெளியேறியதும்

கொஞ்ச நேர சுதந்திரத்திற்குத்தான் !

[அர்த்தங்கள் ஆயிரம் தொகுப்பிலிருந்து]

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (7-Mar-13, 9:06 pm)
பார்வை : 178

மேலே