ஊர்

கொஞ்சம் வீடுகள்
நிறைய உறவுகள்
சின்ன சின்ன சண்டைகள்
மனதோடு வாழும் முகங்கள்

பச்சை பசேல் வயல்
சுற்றி திரியும் பறவைகள்
சிறகடிக்கும் வண்ணத்தி
கொஞ்சி விளையாடும்
ஆற்று நீர்

அங்கங்கே கோவில்
குலம் காக்கும் சாமி
திருநீறோடு பாசத்தையும்
சேர்த்து நெற்றியில் பூசும்
அம்மா

போயிட்டு வரேன் அம்மா
போயிட்டு வரேன் அப்பா
. . . . . . . . . . . . .

இப்படி எல்லோருக்குமாய்
விடை சொல்லி

பேருந்து ஏறுகையில்

சில சொட்டு கண்ணீரையும்
ஏக்க பார்வையையும்
மூட்டை கட்டி கொடுத்தனுப்பும்
பெற்றவர்களுக்கும்
உறவுகளுக்கும்

எப்படி புரிய வைப்பேன்

என்
மனம்,
உயிர்,
நினைவு

யாவையும் அவர்களிடமே விட்டு

வெறும் உடல் கூடு மட்டும்
வேலை தேடி
பட்டணம் வந்த செய்தியை

எழுதியவர் : ந.சத்யா (10-Jun-13, 8:33 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : oor
பார்வை : 90

மேலே