இராவண வாளைத் தா!
முக்கொடித் தமிழை மண்ணில் படரவிட்டு,
கலைமிகு நாகரிகம் அதில் நனையவிட்டு,
கனியென சைவத்தைத் தந்த எம்தேவா!
கன்னியென் கனலான கேள்விக்குப் பதில்தருமினே!
இமயத்திலும் அம்பலத்திலும் ஆடிக் களிக்கின்றீரோ?
இளந்திங்களோடு தண்கங்கையும் நறுங்கொன்றையும் அணிந்தே ,
இன்னமுத தமிழ்ப் பாடல்களில் மூழ்கினீரோ?
கன்னல்சேர் பால்குடங்களின் நீராட்டில் நினைவிழந்தீரோ?
அழுத குழவிக்குப் பாலமுதம் தந்த மணவாளா!
அன்னையை நாடும் பசித்தப் பிள்ளையின்
அவலம் தீர்க்க இன்று மனமில்லையோ?
அஞ்செழுத்து நாவுரைக்கக் கல்லும் மிதந்திடும்
ஆவுடையழகா! கலியுகத்தில் வரக் களைப்பாமோ?
அல்லது நின் அகமும் ஒரு கல்தாமோ?
சுடுகாட்டு நீறணிந்து , தலைமாலை தலைக்கணிந்த
சுந்தரக் கூத்தனுக்கு இறப்பும் இயல்பாமோ?
சரணம் அடைந்தவனைக் காத்திடவே கூற்றுதைத்தச்
செம்மலர் பாதத்திற்கு இம்முறை சோர்வாமோ?
உமையவளுக்கு ஊனில் ஒரு பாகம் பகர்ந்தோனே!
உடலெல்லாம் தீப்பட்டு பெண்மை உருகுலையும்போது
ஊமைபோல் அமைதி காத்திடல் தகுமோ?
நுதலினில் அணிந்திட்ட நீற்றைச் செங்குருதி
நீக்கலாமோ ? உருவிலானை உரு அழித்திட்ட
நின் முக்கண் மூச்சற்றுப் போனதோ?
நந்திக் கொடியோனே! நன்மையோ நீதியோ?
சிறுபுல் காளைக்கு வீரம் கற்பிக்கலாமோ?
சிறுதுகள் சுடுசூரியனுக்கு ஒளி சேர்க்கலாமோ?
செம்மேனி வண்ணா ! மூத்தத் தமிழின் முதல்வா!
சிறியேன் நினக்கு நியாயம் உரைக்கலாகுமோ?
வையகமாம் மேடைதனில் யாவரையும் ஆட
வைக்கும் ஆடலழகா! நின் சோதனைக்கு அளவில்லையோ?
வெஞ்சுடர் கதிர் மென்மலரை எரிக்கலாமோ?
வெள்ளைத் தாளை எழுதுகோல் கிழிக்கலாமோ?
என் எழுதுகோலில் குருதிக்கடல் சிந்துகிறதே!
காரிருள் விழுங்கிய தொல் ஈழத்திற்குப் புறப்பட
இராவணனுக்கு ஈந்த கூர்வாளைத் தாரீரோ?