ஓர் எழுத்தாளனின் கதை-3

----------------------தொடர்கதை : இரா.சந்தோஷ் குமார்

...............................................................................................

கவியரங்கம் நடக்கும் நாள்.

கொடுக்கப்பட்ட ” ” தலைப்பில் பல மாணவர்கள் தங்களது கவிதை திறனை காட்டி, மொழி உச்சரிப்பில் வசீகரமாக பேசி பார்வையாளர்களை கவர்ந்தார்கள். அதில் பெரும்பாலும் தமிழ் முதுகலை,இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள். இவர்களுக்கு இணையாக தமிழ் ஆர்வலன் என்ற அளவில் மட்டும் ஓரளவு தமிழ் அறிவு பெற்றுள்ள இளங்கலை உளவியல் முதலாமாண்டு மாணவன் தினகரன் என்ன பேசி எப்படி அவனின் கவி திறமையை நிரூபிக்க போகிறான் என்று அங்குள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
அதில் மிக முக்கியமாக கவியரங்க சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர், பிரபல நாவல் எழுத்தாளர் ”மின்னல் பாபு” என்பவரும் தினகரனின் கவிதை வாசிப்பை ஆவலுடன் எதிர்நோக்கினார்.

தனக்கு இருக்கும் தன்னம்பிக்கை காரணமாக , வாழ்க்கையில் முதன் முறையாக மேடை ஏறினான்.

ஒலிவாங்கி முன்னால் நிற்பதற்கு முன் மேடையிலிருந்த சிறப்பு விருந்தினர், கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பெரியவர்களை வணங்கி விட்டு பேச ஆரம்பிக்கும் முன் அவனின் தமிழ் பேராசிரியர் சொன்ன “-----------
நிதானமாக பேசு,
உச்சரிப்பில் கவனம்,
வார்த்தைகள் திக்குகிறது என்றால் நிறுத்திவிடு
உள் மூச்சை வெளியிட்டு பின்பு வாசி,
பரிசு என்பது முக்கியமல்ல.
உன் திறமை பேசப்படவேண்டும்.. “
என்ற அறிவுரைகளை கவனத்திற்கு கொண்டு வந்தான்.

ஒலிவாங்கி அவனின் குரலை உள்வாங்க தன்னை தயார்ப்படுத்திக்கொண்டது. பேச ஆரம்பித்தான். ஒவ்வொரு வார்த்தையிலும் திக்கி விடக்கூடாது என்ற கவனம் அவனுக்கு இருந்தது.

“ என் தமிழ் தாய்க்கு முதல் வணக்கம் ! , மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர் ஐயா அவர்களுக்கும் கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் என் பணிவான வணக்கம் ! , என்னையும் கவிஞன் என்று உருவாக்க பாடுப்படும் என் அன்னை போன்ற தமிழ் பேராசிரியருக்கு வணக்கம் ! மற்றும் அரங்கத்தில் கூடியிருக்கும் ஆசிரியர் பெருமக்கள், மாணவ தோழமைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம் !

கவிதை என்று ஒன்று வாசிக்க வந்திருக்கிறேன்.


கவிதை ரோஜாவை
பறித்து, படித்து
தூவ விடுகிறேன்.
மீறியும் முள்ளாக
தவறுகள் உங்கள்
மீது விழந்தால்..

சிறுபிள்ளை செய்த
பிழையாக எண்ணி
என்னை மன்னியுங்கள்.

(தனக்கான முதல் கைத்தட்டல்களை அந்த அரங்கத்தில் பெற்றுக்கொண்டான். அடுத்த சில நொடிகளில் கைத்தட்டிய கைகள் இவனை கைநீட்டி வசைப்பாடும் என்று யாரும் அங்கு எண்ணியிருக்க வாய்ப்பில்லை)


”ஜாதிகளை ஒழிப்போம்” இதுதான் தலைப்பு

தலைப்பு வாசித்து முதல் வரியை படித்தான்

.” ஆதி ............................................. “ ஏனோ தீடிரென்று தினகரனுக்கு மறதி வந்துவிட்டது... யோசிக்க நேரம் எடுக்க எடுக்க , அரங்கத்தில் மாணவர்கள் கூச்சல் செய்வதை பார்த்தவனுக்கு சற்று பதற்றம் அதிகரித்தாலும் நினைவுக்கு கொண்டுவந்த வரிகளை சொல்ல ஆரம்பித்தான்.

ஆதிக்கப்படுத்தும் ஜாதிகளை
கொளுத்திடுவோம்
சாதிக்க பிறந்த மானிடனே
உ ... உ.... உ....... உன்... ................ ... (திக்கி பேசுவதை கேட்டு மீண்டும் அரங்கத்திலுள்ள சில குறும்புக்கார மாணவர்கள் அவனை பார்த்து ஏதோ கூச்சலிட.. ஒருவிதமான பரபரப்பு சூழ்நிலை தினகரனுக்கு ஏற்பட்டுவிட்டது. மீண்டும் பேச முயற்சித்தும் அவனால் திக்காமல் பேச முடியவில்லை.)

மேலும்,

தினகரன் திக்கி திணறி பேசுவதை பார்த்த கவியரங்க சிறப்பு விருந்தினர், “எழுத்தாளர் மின்னல்பாபு ”முகம் சுளித்து ஏதோ சொல்ல, கல்லூரி முதல்வர் தினகரனை நோக்கி

“ ம்ம் என்னாச்சு. ? ஒழுங்கா படி.! இல்லைன்னா கீழ இறங்கு...”

“ ச ச சார் இ இ இப்ப .. பேசிடுறேன் சார் “ என்று எப்படியோ கவிதை முழுவதுமாய் வாசித்திட வேண்டும் என்று தீர்க்கமாக நின்றாலும் தொடர்ந்து அவனால் வாசிக்க அங்குள்ள சூழ்நிலை அவனுக்கு கைக்கொடுக்க வில்லை.

மின்னல் பாபு கல்லூரி முதல்வரிடம் “ அவனை கீழே இறக்கிவிடுங்க.. பரிசு கொடுத்துட்டு நான் வேற ஒரு விழாவிற்கு போகணும். நல்ல பேசுகிறவனை கூப்பிட்டு பேச வச்சிருக்கலாமே “ என்று சொன்னதை கல்லூரி முதல்வர் அதை பெரிய அவமானமாக எடுத்துக்கொண்டார். அந்த வேகத்தில் எழுந்து தினகரனின் கையை இழுத்து கீழே இறக்கி விட்டார். இழுத்த வேகத்தில் அவன் கால்கள் தடுமாறி படிக்கட்டில் உருண்டவாறே மேடைக்கு கீழே வந்தான் .

அங்கிருக்கும் அனைவருக்கும் முன் தான் அசிங்கப்படுவதை தினகரனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அந்த சம்பவத்தால் அவனுக்கு நெஞ்சம் பாரமாகிவிட , ரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்க, அவனின் மூளைக்குள் ஒரு ரசாயன பாதிப்பை கொடுக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீரை அடக்கிக்கொண்டு அரங்கத்தை விட்டு வெளியேற புறப்பட்டான். அப்போது அவனின் சக மாணவி காவியா, அவனை நோக்கி ஓடி வருகிறாள்.
“ தினா.... வெயிட்.. ! டென்ஷன் ஆகாதே..! நீ எழுதின கவிதையை கொடு நான் வாசிக்கிறேன். ”

காவியா.....!

தினகரனின் கவிதைக்கு ரசிகை. இதுவரை தினகரனிடம் அவ்வளவு நெருக்கமான சிநேகம் கொண்டதில்லை என்றாலும் தினகரன் மேல் அவளுக்கு ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது.

” தினா...!! ஏன் இப்படி நிக்கிற.. ? “ காவியா முதன்முறையாக தினகரனின் தோள்களை பற்றி தோழியாக தன்னை காட்டிக்கொள்ளும் தன்னிச்சையாக நிகழ்கிற தருணம் அது.

”தினா.. பேசுடா..! நான் காவியா...டா... உன் கவிதை கொடு.. நான் பேசி நீ யாரன்னு காட்டுறேன். நீ அவமானப்பட்ட இதே இடத்தில உனக்கு பேர் வாங்கி தரேன் டா... ப்ளீஸ் அந்த கவிதை எழுதின பேப்பர் எங்க...? “

தினகரனுக்கு எதுவும் காதில் விழவில்லை. உணர்ச்சியற்ற , வெட்டிப்போட்ட ஒரு மரமாகவே காணப்பட்டான்.

“ தினா.. தினா..! என்னாச்சு... ?“

” ஐயோ மேம்... தினா கிழே விழுந்துட்டான்..........” காவியா கதறல் ஒலியை கேட்ட தமிழ் பேராசிரியர் ஓடிவந்து பார்க்கிறார்.

”தினகரன்... ”என்று சத்தமாக பேராசிரியர் கத்தினாலும் அவனுக்கு ஏதும் கேட்கவில்லை...

---அதீத உணர்வுகள் அவனின் மூளையை பாதிப்புக்கு உள்ளாக்கும்.----
இதற்குமுன் ஒரு விபத்தில் இவன் அதிர்ச்சியுற்ற சமயத்தில் அவனை பரிசோதனை செய்த மருத்துவர் கொடுத்த மருத்துவ அறிக்கை இது. உண்மையாகிவிடுமோ ?


----(தொடரும்)

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (22-Feb-14, 4:48 am)
பார்வை : 211

மேலே