சிசு

தாயின் வயிற்றுச் சிசு
தரணிக்கு வரும் வரைக்கும்
தன்னிலை அறியாத
தரமறியாக் குழந்தை!
கருப்பையே தொட்டிலாக்கி
காவலரண் பல வாக்கி
காரிருள் படர்ந்திருக்க
கனிந்திருக்கும் அக்குழந்தை!
சிறு உலகம் தாய் வயிறு
சிறந்திருக்கும் அழகுயிறு
சீதமிகும் உலகைக் காண
சிணுங்கியேயிருக்கும் அக்குழந்தை!
காலினாலே எட்டியுதைத்து
கோதையவள் மகிழ வைத்து
கரும்பின் சுவை இனிமையாக்கி
காட்டிடுமே அக்குழந்தை!
எண்ணம் பல உருவாக்கி
எதிர்பார்க்கை பலதாக்கி
என்றும் பல கனவாக்கி
ஏற்றிவிடும் அக்குழந்தை!
புது உயிரை தானேற்று
புவி காண தான் வளர்ந்து
புதுமை பல காட்டிடவே
பார்த்திருக்கும் அக்குழந்தை!
புது மலராய் உலகைக் காண
பருவம் அதை எதிர்பார்த்து
பல திங்கள் பல விதமாய்
படம் காட்டும் அக்குழந்தை!
மொழியில்லா உலகமது
மௌனமாய் பேசுமது
மென்மை உடல் கொண்டு
பேசிடும் குழந்தை அது!
தாயின் உதிரமதை
தன் உணவாய் ஏற்று அதை
தாகம் தீர உண்டு அதை
தனித்திருக்கும் அக்குழந்தை!!
--------------------------------------------------------------------------
இக்குழந்தை
இச் சிறுவுலகில்
செய்திடா வேலை பல
இப்புவி உலகில்
செய்திடும் வேலைதான் என்ன?
கண்டதை கற்றதனால்
கிரங்கிடும் செயல்களினால்
காதலும் உறவுகளும்
கவலை கொள்ள வைப்பதேனோ?
ஜவ்ஹர்