அல்ல அல்ல
நான் சிரித்தால் சிரித்து
நான் அழுதால் தானும் அழுது
அல்ல அல்ல
என் அறைக் கண்ணாடியல்ல.
நான் பேசினால் பேசி
பேசாவிட்டால் ஊமையாகி
அல்ல அல்ல
கைபேசியுமல்ல.
நான் களித்தால் அகம் மகிழ்ந்து
நான் முகம் வாடினால்
மொத்தமும் வாடி
அல்ல அல்ல
என் காதலன் அல்ல.
நலமென்றால் நறுமுகை கொண்டு
நோயில் வீழ்ந்தால் நாடி வந்து
அல்ல அல்ல
என் தாயுமல்ல.
செல்வம் மிக்கு உண்டெனினும்
அருகிப் போனாலும்
என்றும் அருகிருக்கும்
அல்ல அல்ல
என் நிழல் அல்ல.
கொஞ்சினாலும் கடிந்தாலும்
உச்சி மேல் வைத்தாலும்
உதறி எறிந்தாலும் - நம்
உயிரே பிரிந்தாலும் என்ன,
என்றும் எனை விட்டுப் பிரியா
உன் நட்பழகுதான் அது !!