எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் --- விரல் மாறும் தொடர்கதை பாகம்-13 ~~~சந்தோஷ்

எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் ---
விரல் மாறும் தொடர்கதை
பாகம்-13

-------------------------------------------------------------------------------------
---எவர் ஸ்மைல் மரண வாக்குமூலமாக எழுதிய கடிதத்தை சூர்யா படிக்க ஆரம்பித்தப்போது.

இன்ஸ்பெக்டர் ராமபத்ரன் மற்றும் கான்ஸ்டபின் தியாகராஜன் திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

“ வீட்டுல யாரு இருக்கீங்க? “ கான்ஸ்டபிள் தியாகுவின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த ஜீவா வை நோக்கிய ராமபத்ரன் “ என்ன கொலைப்பண்ணிட்டு தூக்குல தொங்க வச்சிட்டீங்களா ம்ம்ம் ? “

“ அய்யோ சார், அவங்கள நாங்க கொலைசெய்ய அவசியமே இல்ல.எங்கள காப்பாத்தின சாமிங்க அந்த அக்கா “ பதட்டத்துடன் அறைக்கு வெளியே வந்த சூர்யா.

“ எங்க இருக்கு டெட்பாடி, இது என்ன உன் கையில பேப்பர், இங்க கொடு “ சூர்யாவின் கையிலிருந்து இன்ஸ்பெக்டர் கைக்கு மாறியது அந்த கடிதம். தெளிவான கையெழுத்துடன் இருந்த அந்த கடிதத்தை நுணக்கமாக படித்த ராமப்த்ரன். “ இது அவளோட கையெழுத்துதானா? இதுக்கு முன்னாடி அவ எழுதினது எதாவது இருந்தா அதையும் கொடுங்க. “

“ இதுக்கு முன்னாடி எழுதினது வேற எதாவது இருக்கான்னு தெரியல சார். ஆனா இந்த மரண வாக்குமூலம் அவங்கதான் எழுதியிருக்காங்க “ சரஸ்வதி சொல்வதை கேட்டிக்கொண்டிருந்த ராமபத்ரன் தீடிரென்று அந்த் கடிதத்தை மீண்டும் படிக்க ஆரம்பித்தார். அந்த தாளை திருப்பி திருப்பி பார்த்தார்.


”அது மரணவாக்குமூலமா இல்லையான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். ஒகே. தியாகு போஸ்ட்மார்ட்டம் பண்ண ரெடி பண்ணு. அதுக்கு முன்னாடி போட்டோகிராபர் வரச்சொல்லி கிளியரா எடுக்க சொல்லு. இவளுங்ககிட்ட ஃபிங்கர் பிரிண்ட்ஸ் வாங்க ஏற்பாடு பண்ணு. “ கான்ஸ்ட்டிபிளுக்கு அதிகாரமிட்ட காவல் ஆய்வாளர் ராமபத்ரன்.. ஜீவிதாவை மேலிருந்து கீழாக பார்த்து.. “ ஆமா நீ... நேத்து கோயம்புத்தூர் போலீஸ்காரர்களை அடிச்சவ தானே.. “ என்று சொல்லிக்கொண்டே தன் துப்பாக்கியை எடுத்து குறிப்பார்த்தார் ஜீவாவின் நடு நெற்றியை.
“ யூ ராஸ்கல்... கோயம்புத்தூர் ல போலீஸ் ஸ்டேஷன் புகுந்து அடிச்ச போட்டது இல்லாம. அந்த ஆடிட்டோரியத்துல 3 பேரை லைவ்வா கொன்னு இருக்க, உன்கூட இன்னும் 5 பேரு இருக்கனுமே “

(கமலி,சூர்யா, ஜீவா-சரஸ்வதி உடன் எவர்ஸ்மைல் கோவையிலிருந்து தப்பித்து வந்து சத்தியமங்கலம் அருகே எவர்ஸ்மைலின் உறவினர் வீட்டில் தலைமறைவாக தங்கியிருந்தனர். ஆனந்தி- திவ்யா மட்டும் போலீஸ்காரர்களின் நடவடிக்கையை வேவுப்பார்க்க கோயும்புத்தூரிலேயே வேறு ஒரு இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். ஆனால் போலீஸ்காரார்களை தாக்கியபோது காவல்நிலையத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் ஜீவாவின் உருவம் நன்கு பதிவாகி இருந்தது. அது தமிழ்நாட்டின் அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பிவைக்கட்டிருக்கும் என்பதை இந்த ரெயின்போ குழு அறிய தவறவிட்டுவிட்டது. இந்த நிலையில் எவர்ஸ்மைல் தற்கொலை. அந்த பதற்றத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டனர். தெரிவித்தால் மாட்டிக்கொள்வோம் என்று தெரியவில்லை.அந்நேரத்தில் தெளிவில்லை. பாவம் )

ஜீவா மீண்டும் அதிரடியாக போலீசை தாக்கி தப்பித்துவிடலாம் என்று எத்தனித்த போது. ராம்பத்ரன் சரஸ்வதியின் தலையில் வைத்தார் துப்பாக்கியை.. “ ஏய் இந்த கில்மா, சல்மா, ஜல்மா வேலைலாம் என்கிட்ட வச்சிக்காதே. ம்ம்ம் எல்லாரும் ஒன்னா தரையில உக்காருங்க. ”
சரஸ்வதியின் உயிருக்கும் பயந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர்.

”தியாகு ஜீப்ல கயிறு இருக்குதுல. அது எடுத்துவந்து இவங்க எல்லாரையும் இறுக்கமா கட்டிப்போடுங்க.”

சரஸ்வதியை தவிர சூர்யா, கமலி, ஜீவா மூவரும் ஒன்றாக கட்டிவைக்கப்பட்டனர்.
சரி எவர்ஸ்மைல் ஏன் தூக்குமாட்டிக்கொண்டாள். போலீஸ் மூளைக்கு சட்டென்று பட்டது க்ளூ.

உங்க கூட இருக்கிற மத்த ரெண்டுப்பேரும் எங்க ?

யாரிடமிருந்தும் பதில் ஏதும் வரவில்லை.

” ஐ காட் இட்.. ஐ நோ... இது தற்கொலை இல்ல. கொலை.! “

“எப்படி சார் ?” தியாகு.

சூர்யா, ஜீவா, கமலி, சரஸ்வதி நால்வரும் திடுக்கிட்டனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்களுக்கு பிறகு. கோவை மாநகர காவல்துறையிடம் எவர்ஸ்மைல் கொலை வழக்கு பற்றிய தகவல்களை அளித்தார் இன்ஸ்பெக்டர் ராமபத்ரன். அதன்பிறகு போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கினர் ஆனந்தியும் திவ்யாவும். இப்பொழுது ஆறுபேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது.

கோவை மாநகர குற்றவியல் நீதிமன்றம்..!

சரஸ்வதி - ஜீவா , ஆனந்தி, திவ்யா, கமலி, சூரியா ஆறுபேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினார்கள்.

நீதிபதி மைக்கேல் ராணி-க்கு வணக்கம் தெரிவித்து, அரசு வழக்கறிஞர் பேச ஆரம்பித்தார்.

”கணம் நீதிபதி அவர்களே. குற்ற வழக்குகளில் இதுவரை நாம் கண்டிராத வழக்காக இந்த வழக்கு இருக்ககூடும். ஆம். திருநங்கை எவர் ஸ்மைல் தலைமையில் ஆனந்தி,திவ்யா, கமலி ஆகிய திருநங்கைகளும் மற்றும் ஜீவா என்கிற திருநங்கையான ஜீவிதா இவரின் மனைவி சரஸ்வதி மற்றும் சூர்யா எனும் திருநங்கை ஆகியோர் கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடந்த கொலை, வழிப்பறி, போர்ஜரி ஆகிய குற்றங்களில் ஈடுப்பட்டதாக தகவல் அறிந்த கோவை மாநகர காவல்துறை, தனிப்படை அமைத்து துரிதமாக ஆய்வு நடத்தி கண்டறிந்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து போலீஸ்காரர்களை கடுமையாக தாக்கிய குற்றம் இந்த குழுவின் மீது உள்ளது.
அடுத்ததாக இந்த திருநங்கை குழுவின் தலைவர் எவர்ஸ்மைல் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டார் என்பதை ஊர்ஜிதம் செய்கிறார் சத்தியமங்கல காவல் ஆய்வாளர் ராமபத்ரன்.

யுவர் ஆனர்..! இன்ஸ்பெக்டர் ராமபத்ரனிடம் சில தகவல்கள் தெளிவுப்பெற வேண்டும். அவரை விசாரிக்க அனுமதி வேண்டுகிறேன்.”

“யெஸ் அனுமதி வழங்கப்படுகிறது. ” நீதிபதி.

வழக்கறிஞர் : ” இன்ஸ்பெக்டர்..! எவர்ஸ்மைல் கொலை செய்யப்பட்டார் என்று எவ்வாறு உறுதிப்படுத்தினீர்கள்.? ”

ராமபத்ரன் :
” கொலை செய்யப்பட்ட வீட்டிலிருந்த இந்த திருநங்கை குழுவினரால் எவர் ஸ்மைலின் மரணவாக்குமூலம் என்று தரப்பட்ட இந்த கடிதத்தில் இருந்துதான் உறுதிசெய்தேன்.”

வழக்கறிஞர் சற்று கிண்டலாக “ எப்படி? ஆச்சரியமாக இருக்கிறதே.? இந்த கடிதத்தில் கொலை செய்தவர் ஒப்புதல் வாக்குமூலமா அளித்துள்ளார். ? ”

இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு “ இல்லை. ஒப்புதல் வாக்குமூலம் இல்லை. இந்த பேப்பரில் குற்றவாளிகள் தடயத்தை விட்டுசென்றுவிட்டார். அதற்கு முன்பு அந்த தாளில் இருக்கும் விஷயத்தை நீதிபதி அவர்களுக்கு படித்து காண்பிக்க விரும்புகிறேன். ஏனென்றால் இதில் பல விஷயங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் இருக்கிறது.“

எவர்ஸ்மைல் எழுதப்பட்டதாக சொல்லப்படும் அந்த கடிததை ராமபத்ரன் படிக்க ஆரம்பித்தார்.

------- வணக்கம். நான் எவர்ஸ்மைல். ஒரு திருநங்கை என்று இந்நேரம் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்னும் சற்று நேரத்தில் நான் தற்கொலை செய்யப்போகிறேன். காரணம் என் மனசாட்சி என்னை உறுத்துகிறது. உயிரை உலுக்குகிறது. திருநங்கை எனும் என் பாலினத்தினவரை நான் தவறான முறையில் வழிநடத்திவிட்டேன்.
இந்த மறைமுக வாழ்க்கை, முகமூடி அணிந்துக்கொள்ளும் எங்களின் செயல்கள் ஒருப்போதும் திருநங்கை சமூகத்திற்கு வெளிச்சத்தை தந்துவிடாது.

நேற்று என் தங்கை ஜீவிதா.. மேடையிலேயே சிலரை அடித்து கொன்றப்போது என்னுள் தோன்றியது இதுதான். “ தவறு செய்கிறோம். இது தப்பு தப்பு குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்பதை இதுவரை நாங்கள் உணராமல் , சட்டத்தை கையில் எடுத்து , சட்டத்தை மீறி பல குற்றங்களை செய்துவிட்டோம். கயவர்களை கண்டு கொலைசெய்யும் வெறித்தனம், தீவிரவாத செயல்களால் மட்டுமே எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர இயலாது என்று இப்போது உணர்கிறேன்.

மிக முக்கியமான ஒன்றை இந்த அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
திருநங்கை என்று சொல்லபபடும் நாங்கள் மட்டும் மாற்று பாலினம் அல்ல. பெண்ணாக பிறந்து ஆணாக உணர்ந்து ஆணாக செயல்படும் திருநம்பி- களும் இருக்கிறார்கள். ஆனால் இதை யாரும் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை. ஆண் நடத்தையில் பெண்மையை கண்டால் கேலி செய்யும் இந்த உலகம், ஒரு பெண்ணின் நடத்தையில் ஆண்மையை கண்டால் “ கம்பீரம் “ என்று பாராட்டுகிறது. திருநம்பிகளுக்கும் வலி இருக்கிறது. காதல் இருக்கிறது, வேதனை இருக்கிறது. அவர்களையும் கண்டறிந்து சமூகத்தில் நிம்மதியாக வாழவிடுங்கள்.

ஆண் என்றும் பெண் என்றும் கர்வத்தில் ஆடும் தோழர்களே தோழிகளே..!



ஒர் ஆண் பெண் போல பாவனை செய்வதும், கொஞ்சி, நெருங்கி, ஒட்டி பேசுகிறவன் இருக்கிறான். இவன் எங்களில் பாதி. பாதி திருநங்கை.
ஒரு பெண் ஆண் போல பேசுவதும், ஆண்களின் உடை உடுத்திக்கொள்வதும் உண்டு. இவள் பாதி திருநம்பி.
பெண்ணும் பெண்ணும் மற்றும் ஆணும் ஆணும் ஓரினச்சேர்க்கையாய் உடலுறவில் ஈடுப்படுகிறார்கள். இயல்புக்கு மீறி, இயற்கையான ஈர்ப்புக்கு மீறி வாழம் இவர்கள் எல்லாம் சரியான ஆண் - பெண் பாலினமா ? இன்னும் இன்னும் இதுப்போன்ற

பால் புதுமையர்
பால் நடுநர்
முழுனர்
இருனர்
திரினர்
பாலிலி
திருனடுனர்
மறுமாறிகள்
தோற்ற பாலினத்தவர்
முரண் திருநர்
பிறர்பால் உடையணியும் திருநர்
இருமை நகர்வு
எதிர் பாலிலி
இருமைக்குரியோர்
இடைபாலினம்
மாறுபக்க ஆணியல்
மாறுபக்க பெண்ணியல்
அரைபெண்டிர்
அரையாடவர்
நம்பி ஈர்ப்பனள்
நங்கை ஈர்பனன்
பால் நகர்வோர்
ஆணியல் பெண்
பெண்ணன்
இருமையின்மை ஆணியல்
இருமையின்மை பெண்ணியல்
பிறர்பால் உடை அணிபவர்

என இருபதுக்கும் மேற்ப்பட்ட மாற்று பாலினத்தினவர்களாக உங்களின் குணாதியங்களில், உடலியலில், மனதளவிலே எதாவது ஒரு குறைப்பாட்டுடன் இருப்பீர்கள் ? இப்படி இருப்பீர்கள் என்று உங்களுக்கு எல்லாம் தெரியாது. ! ஏன்னா உங்களுக்கு தெரிஞ்ச ஒரே அறிவு... அடுத்தவர்களை கேலி செய்வதும், அடுத்தவர்களின் பலவீனத்தை கிண்டல் செய்வதும் மட்டுந்தான். அடத்தூ....!

சச்சின் டெண்டுல்கர் இறங்கி சிக்சர் அடிச்சா கைத்தட்டுறீங்க. கமலஹாசன் பரத நாட்டியம் ஆடினா கைத்தட்டுறீங்க. ஆனா இவங்க ஆடும் போது தெரியும் பெண் நளினத்தில் தெரியலையா இவர்களும் பெண்களே.. என்று தெரியவில்லையா.
இவர்களும் அந்நேரத்தில் திருநங்கையர்களேன்னு உங்கப்புத்திக்கு தெரியாது. ஏன்னா இவர்கள் எல்லாம் பிரபலம். நாங்கள் என்றால் உங்களுக்கு எகத்தாளம். சச்சின்னும் , கமலஹாசனும் ஆடும்போது வந்துவிடும் உணர்வுதான் எங்களுக்கு எப்போதும் நிரந்தரமா இருக்கிறது. இதை உங்களால் புரிஞ்சுக்கவே முடியாது. ஏன் புரிஞ்சுக்கிற புத்தி உங்களுக்கு இல்ல. ஆனா கேலி பண்ண மட்டும். ஒருத்தரை இளக்காரம் செய்ய மட்டும் நல்லா தெரிஞ்சிவச்சிப்பீங்க.

இப்படி கிண்டல் , கேலி செஞ்சு செஞ்சுதானே எங்களை இந்த நிலைமைக்கு ஆக்கிவிட்டிங்க. படுப்பாவி மக்களே..!

நாங்க எல்லாம் ஆணுக்கு ஆண்
பெண்ணுக்கு பெண் என்று சர்வ வல்லமை படைத்த திறமையானவர்கள்.

இந்த திறமைக்கு அங்கீகாரம் கொடுங்கடா.. எங்களையும் உங்களோடு. உங்க நண்பனா. உறவா வாழவிடுங்கடா.. விடுங்கடி..




பாவப்பட்டு இடஒதுக்கீடு கொடுத்து வேலைக்கொடுத்தா மட்டும் போதாது. வேலை பார்க்கும் போது தொந்தரவு பண்ணாத சமூகப்பார்வையும் கொடுங்க

சினிமா படத்தில எங்களை அசிங்காமா காட்டாதீங்க. நாங்களும் மனதர்கள் தான்.

இதெல்லாம் சட்டத்தால் மட்டுமே மாற்றம் கொண்டுவரமுடியாது. ... மொத்த தேசத்திலும் மொத்த மக்களுக்கும் ஒருவரது உணர்வு சம்மந்தப்பட்ட விஷயங்களான பாலின வேறுப்பாடு பற்றி பாலினம் ஈர்ப்பு பற்றி, பாலியியல் கல்வி பற்றி விழிப்புணர்வு வந்தே ஆகணும். அப்போதான் நாங்க இந்த சமூகத்தில நிம்மதியா வாழ முடியும். இனியும் நாங்க அவமானப்பட்டு வாழ முடியாது.. வாழ கூடாது.

என் இனத்தினவரை , என்னை நம்பி வந்தவர்களின் மனதில் கொலைவெறியை ஏற்றிவிட்டேன். இனி நான் சொன்னாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள். என் தற்கொலையில் அவர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். இவர்களை நான் தவறாக வழிநடத்திவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சியோடு தூக்கில் தொங்கி தற்கொலை செய்கிறேன்.

நன்றி.. திருநங்கையருடன். திருநம்பியர்களுடன் இணைந்து இந்த சமூகம் வளம் பெறட்டும்..! இந்தநாடு வல்லரசாக வேண்டும். !! ---------------



இன்ஸ்பெக்டர் கடிதத்தை படித்து முடித்தப்பிறகு.. நீதிமன்றத்தில் சில நொடிகள் மெளன நிரம்பி வழிந்தது.


வழக்கறிஞர் தொடர்கிறார் “ சரி இதுல கொலைக்காரர் பற்றி இதுல எந்த தகவலும் இல்லையே..”

இன்ஸ்பெக்டர் ராமபத்ரன் : ” இருக்கிறது. இந்த கடிதம் எழுதியது எவர் ஸ்மைல் இல்லை. இந்த கடிதத்தின் பின்புறம் பாருங்கள். மஞ்சள் பொடியின் கறை இருக்கிறது. மேலும் இந்த கடிதம் இங்க் பேனாவால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விஷயத்தில் தான் கொலைக்காரன்............. இல்ல இல்ல கொலைக்காரி தப்பு செய்துவிட்டாள்.

கொலைநடந்த பிறகு. விசாரணைக்கு நான் அந்த வீட்டிற்கு சென்றப்போது அங்கிருந்த திருநங்கையர்கள் அனைவரின் முகப்பாவனைகளை கவனித்தேன். து. அதில் மஞ்சள் தேய்த்து குளித்த முகத்துடன் ஒரு பெண் இருந்தார். அவர் திருநங்கை அல்ல. மேலும் அவரின் ஆட்காட்டிவிரல்,நடுவிரல். கட்டைவிரலில் இங்க் கரை இருந்தது. இந்த கடிதம் எழுதியப்போது அவரின் கையில் இந்த பேனா மை கசிந்து விரலில் பட்டிருக்கூடும் என்று சந்தேகித்தேன். அதன் அடிப்படையில் கைரேகை சோதனை செய்து பார்த்தப்போது கடிதத்திலுள்ள கைரேகை. எவர்ஸ்மைல் கழுத்தில் உள்ள கைரேகை, மின்விசிறி, நாற்காலி போன்றவற்றில் இருக்கும் கைரேகை தடயங்களை இந்த பெண்ணின் கைரேகையுடன் ஒத்துப்போகிறது.

ஆக கொலை செய்தது சரஸ்வதி...! கடிதத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் பற்றி எவர் ஸ்மைல் அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் எவர்ஸ்மைலின் அண்ணி டாக்டர் காருண்யா. கடிதம் எழுதியதும் சரஸ்வதி தான். “ இன்ஸ்பெக்டர் சொல்வதை கேட்டிக்கொண்டிருந்த சரஸ்வதி....

“ இல்ல இல்ல நான் கொலை பண்ணல......” பலமாக கதறி மயங்கி வீழ்ந்தாள்.

மயங்கியவளின் காதில் ஓர் ஒலி கேட்டது. “ டென்ஷன் ஆகாதேடா.. நான் தான் கொன்னேன். நான் தான் கொன்னேன். “ சரஸ்வதியின் காதலன் சத்யா ஆன்மாவின் குரல்.


சரஸ்வதிக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையை அளித்ததோடு மட்டுமில்லாமல்
ஜீவா , ஆனந்தி, திவ்யா,கமலி, சூர்யா ஆகியோர் கொலை குற்ற செயல்களில் ஈடுப்பட்டதற்காக இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனையும் வழங்கினார் நீதிபதி மைக்கேல் ராணி . நீதிபதி மைக்கேல் ராணி ஒரு திருநங்கை
--------------------------------------------

ஏன் ? ஏன் ? ஏன் ? சத்யா ஏன்? இப்படி பண்ணினாய்.

------விரல் மாறும் கதை----

( தொ..ட..ரு... ம் ) தொடர்வது..............??????



-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (11-Oct-14, 2:17 pm)
பார்வை : 249

மேலே