ஆங்கிலம்

அறிவா அற்புதமா
அறிவியலா அஞ்ஞானமா
புரியா சொற்பதமா
புரிந்தவனுக்கு சாதகமா
தெரியா மொழிகள்
தேவையா சுமையா
சராசரிக்கு சரியாகுமா
சாப்பாட்டுக்கு எமனாகுமா

ஆராயிரம் மொழியில்
ஆண்ட மொழியானதால்
தராதரம் வந்ததா
தமிழும் தாழ்ந்ததா
திராவிட வேராய்
திகழும் தமிழ்மொழி
பரவட்டும் திக்கெட்டும்
பழகிடுவோம் செம்மொழி

மொழியொரு வழியே
மானுட தொடர்புக்கு
மொழியா யாவும்
மூடிவைத்த பாலாகும்
இழிவா உயர்வா
இதுவென் மொழியென்றிட
தெளிவா பகர்வாய்
தேன்தமிழ் நம்மொழியென

சிந்தனை மொழிக்கல்ல
சீர்தூக்கி ஆயும் மனிதனுக்கே
நிந்தனை வழியல்ல
நினது மொழியும் வாழட்டுமே
நந்தனை எரித்து‘
நாயன்மா ராக்க வேண்டாமே
நம்தமிழை வளர்க்க
நாமொன்றும் நாண வேண்டாமே

கண்மூடி கன்னித்தமிழில்
கண்டதும் இல்லையென தூற்றாமல்
கண்டுபிடி கல்வியறிவில்
காணும் பொருளின் சொற்பொருள்
சென்றுபடி மேலதேயம்
சிறப்பான எதையும் கற்றுவா
கற்கண்டு தமிழ்மொழியில்
கற்றதை பரப்பு வெற்றிபார்

அம்மொழியில் பேசிடவே
ஆனந்தமா அல்ல பெருமையா
செம்மொழி, தமிழுனுக்கு
சேந்தேள் விஷமா கூறுமைய்யா
பன்மொழி புலமை
பண்படுத்த வேண்டுமே உன்னை
என்மொழி பெருமை
எவரும் பேசிடவே பெருகுமே

ஆங்கிலமொரு மொழிதான்
அதுபோலவே கிரேக்கமும் சீனமும்
இங்கிதமின்றி கூறாதே
இகலோகம் சுற்றிட உதவாதென்று
எங்கெல்லாம் போவாய்
எதற்காய் போவாயென சொல்லிடேன்
அங்கெல்லாம் நீபேசும்
ஆங்கில அழகை பார்த்திடுவேன்

எழுதியவர் : அ. வேல்முருகன் (21-Oct-14, 6:22 pm)
பார்வை : 211

மேலே