வீழ்க சாதி சமயம் வெல்க மனித நேயம் “தைப்பொங்கல் கவிதைப் போட்டி 2015”

இறையே இலக்காய்க் கொண்டு
அன்பும் அருளும் ஈகையும்
இணக்கமும் இயல்பாய்க் கண்டு
இனிது வாழவே மதங்களாம் !

உயரிய நோக்கம் மடிந்து
உண்மை முற்றிலும் மறந்து
உள்ளம் குறுகிய மாந்தருள்
உட்பகை மூண்டதுதான் என்னே ?

மனுநீதியாம் ஒருகுலத்திற்கு ஒருநீதி
மண்ணில் வேற்றுமைகள் மண்டியதென்னே ?
‘மதம்’கொண்ட மதவாதிகள் இன்று
மனிதரைப் பிரித்தாள்வது என்னே ?

எத்தனை பிறவிகள் எடுத்தோமோ
எத்தனை மதங்கள் கொண்டோமோ
அத்தனை மதங்களும் நமதன்றோ
அதனைப் பகைப்பது அறிவாமோ ?

மத மாச்சரியங்கள் மாளுவதெப்போ
சாதி சச்சரவுகள் சாவதெப்போ
சகலரும் சமமென்பது சாத்தியமே
சாதித்துக் காட்டுவோம் இளையோரே

சாதிமதம் துறந்த கலப்புமணங்களே
சகலருக்கும் பொதுவான நாட்டுவளங்களே
சமத்துவச் சமுதாயம் சமைத்திடுமாம்
சாதி துறப்போம் ! மதம் மறப்போம் !

எழுதியவர் : சபா வடிவேலு (9-Jan-15, 6:17 pm)
சேர்த்தது : சபா வடிவேலு
பார்வை : 115

மேலே