அயல்நாடுகளில் அழியும் நமது கலாச்சாரம்

அன்பு நண்பர்களுக்கு..

சந்தோசமான விடயம் ஒன்றை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். "வளைகுடா நாடுகளில் நம் நாட்டுப்பெண்கள் மற்றும் சீரழியும் நமது கலாச்சாரம்" என்ற தலைப்பில் என் தோழி ஒருவர் வேண்டுகோளுக்கிணங்க நான் எழுதிய கவிதைக்கு நேற்றைய தினம் (02.02.2015) குவைத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவள் முதல் பரிசை தட்டிச்சென்றாள் (இசைக்கருவி - விலைபெற்ற சித்தார் பரிசு). சமூக விழிபுணர்ச்சி மற்றும் மனிதநேயமே வாழ்வு என்று நினைக்கும் எனது வாழ்வில் நான் எழுதும் வரிகள் அனைத்தும் மற்றவர் மனதில் என்னை அறியாமலேயே விதையாக முளைக்கும்போது இதைவிட வேறு என்ன சந்தோசம் / பரிசு வேண்டும் ஒரு நல்ல எழுத்தாளனுக்கு..? மிகவும் சந்தோசமான இந்த நேரத்தில் என் ஆக்கத்திற்கு வித்தாகும் உங்கள் வாழ்த்து வரிகளுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.. என்னையறியா உள்ளங்கள் எங்கிருந்தோ என் வரிகளை படித்து அனுபவித்து வாழ்த்துவதுதான் நான் வாழ்வதின் அர்த்தம் என்று பெருமைப்படுகிறேன்...! உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...!

வளைகுடாவில் நம் நாட்டுப் பெண்கள்

“திரைகடலோடியும் திரவியம்தேடு”

வறுமையெனும் பேரைசொல்லி
வளமையெனும் போதையினில்
அன்பையெல்லாம் அடகுவைத்து
ஆசைகொண்டு போகிறார்.!

தொப்புள்கொடி சொந்தமெலாம்
தொல்லையென்று உதறிவிட்டு
கட்டில்கண்ட கனவுக்கெல்லாம்
காசுமட்டும் போதுமென்றார்..!

விட்டில்பூச்சி வாழ்க்கையதை
விமானமேறி வான்பறந்து
வளைகுடாவில் வந்துவிழ
வலிகளென்று உணர்கிறார்..!

ஆசையாசை யலைந்தவரோ
அரைகுறையின் ஆடைகளை
நாகரீக மென்றுசொல்லி
நஞ்சையுண்டு வாழுகின்றார்..!

ஆணும்பெண்ணும் போதையென
அங்கம்தொட ஆடிடுவார்
ஆபாச மெனும்கூத்தை
ஆடம்பரம் என்றுரைப்பார்..!

பிள்ளைகளை மறந்துவிடும்
பெற்றோரின் களியாட்டம்
பிஞ்சிலேயே பழுத்துவிட
பாலியலைத் தூண்டிடுவார்..!

அஞ்சுவயது பிள்ளைகூட
ஆணவனின் கைகளுக்குள்
காமமெனும் பார்வையிலே
காவுபோடும் கண்டத்திற்குள்..!

வசதியெனும் வார்த்தையிலே
வாலிபமோ தொலைந்துவிட
வெளியிலேதும் தெரியாமல்
வாசணையை தூவிடுவார்..!

வெளிநாட்டு வேலையென
வியாபாரம் பேசிவிடும்
வீட்டுப்பெண் செய்திகளோ
விதியைமீறும் வேசியென..!

குடும்பத்தை குடிபெயர்த்து
குதூகலமாய் அவரலைய
குழந்தைகளின் வலிகளது
குளவிகொட்டும் வேதனைதான்..!

நடையுடையில் நாகரீகம்
நாயைவிட கேவலமாய்
நடுரோட்டில் நிக்குதிங்கே
நாலாபுறமு மடிவாங்கி..!

ஆடைதரும் அழகைவைத்து
அங்கமதை விலைபேச
நிலைகுனிந்து நிற்கின்றேன்
நிம்மதியிலா நாட்டுக்குள்..!

சொல்லியழ யாருமில்லை
சுற்றிவந்த ஊருக்குளே
நினைத்துவிட நிற்கின்றேன்
நிர்கதியாய் நெஞ்சுக்குள்..!

உறவுமீறும் வரைமுறைகள்
உதிரம்பாரா வன்முறைகள்
உள்ளமுணரும் நேரமதில்
உணர்வுகளில் தாய்நாடு..!

அன்பென்னும் பாசமெல்லாம்
அயல்நாட்டில் கிடையாதோ..
அண்ணந்தங்கை உறவுகளின்
அர்த்தமிங்குப் புரியாதோ..?

மதிகெட்டு வந்துவிட்டேன்
மரியாதை மறந்துவிட்டு
மனதாலே உதைபட்டேன்
மரணத்தின் குரல்கேட்டு..!

தாய்நாட்டை குறைசொல்லி
தகுதியினை இழந்துவிட்டேன்
தரமென்னும் மனிதத்தை
தலைகீழாய் போட்டுடைத்தேன்..!

வந்தாரை வரவேற்கும்
வழிமுறைகள் மறந்துவிட்டு
சந்தொன்றில் சாக்கடையாய்
சஞ்சலத்தில் வாழ்கின்றேன்..!

பெண்ணுக்கு இலக்கணமாம்
பெருமைதரும் தாய்மண்ணை
பேராசை யெனைதுரத்த
பேரிழந்து நிற்கின்றேன்...!

கற்புக்கரசி கண்ணகியும்
கடைவிரிக்கும் காவிரியும்
இமயமெனும் சிகரமென
இணையில்லா என்னாடே

இன்னலுறும் வேலையதில்
இன்முகத்தை காட்டுமொரு
இதயமெனு மொருதுடிப்பை
இழந்ததுபோ லொருதவிப்பு..!

சத்தியத்தை தவறவிட்டேன்
சங்கடத்தில் வாழுகின்றேன்
புத்தியுற சொல்லுகின்றேன்
புகழென்றும் தாய்மண்ணே..!

பட்டிகாடு பட்டணமாய்
பாலம்போடும் ஒற்றுமையை
பார்த்ததில்லை பாரதம்போல்
பாரிலெங்கும் இதுவரையில்..!

எத்திசைக்குப் போனாலும்
என்னாயுள் நானுரைப்பேன்
அன்புயெனும் ஜீவனதின்
அடையாளமென் தாய்மனமே..

அது தாய்மண்ணே..! என் தமிழ்மண்ணே..!
வாழ்க பாரதம்..! வளர்க தமிழ் ..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜே (3-Feb-15, 9:54 am)
பார்வை : 175

மேலே