அன்பினால் அமைப்போம் அடித்தளம்

வீதியோர சிறுவன் வினவினான்
--விழிநீர் துளிர்த்திட கூறினான் !
வித்திட்ட முகத்தை அறியேன்
--விளைந்த வயிற்றை அறியேன் !
விட்டுச்சென்ற காரணமும் ஏனோ
--விதியென கூறுவதும் நீதிதானோ !

பிறந்திட்ட பாதை தவறென்றால்
--வாழ்ந்திட நினைப்பதும் தவறா !
முறையின்றி பிறந்தது குற்றமெனில்
--குறையின்றி வாழ்வதும் இயலாதா !
கண்டுக் கொள்வார் எவருமில்லை
--கண்ணீர் சிந்துவார் உலகிலில்லை !

அனாதைகள் என்றால் ஒதுக்குவதேன்
--அகிலத்தில் எங்களை வெறுப்பதேன் !
ஆதரவு அளித்திடவும் மறுப்பதேன்
--ஆறுதல் வழங்கிடவும் யோசிப்பதேன் !
உதவிடுங்கள் உலகோரே எங்களுக்கு
--உடன்பிறப்பாய் ஏற்பீர் எங்களையும் !

அன்பினால் அமைப்போம் அடித்தளம்
--ஆழ்மனதில் அன்பகம் நிறுவிடவே !
அகராதியில் அகற்றுவோம் அனாதையை
--அகிலத்தில் அணிசேர்வோம் உதவிடவே !
பிறக்கின்றோம் வாழ்ந்திடவே வையத்தில்
--வாழவைப்போம் ஆதரவிலா இதயங்களை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Mar-15, 12:41 pm)
பார்வை : 591

மேலே