எவரால் எழுதப்படும் இக்கவிதை
கூந்தல் வழியவிட்டோ.. நூலாடைகள்
பரப்பியோ.. என எதுவும்
மறைத்திருக்கவில்லை...
குழைந்தும்.. தளர்ந்தும். கொஞ்சம்
இறங்கியதுமான தன்னவைகளை
வழியவிட்டபடி...
அவள் அப்படியேதான் அமர்ந்திருக்கிறாள்...
முத்திரைத் தாள்கள் நசுக்கி
நீலச் சாயங்கள் பூச எத்தனித்திருந்தான்
ஒருவன்...
மஞ்சள் பூக்கள் கோர்த்து
கவிதையெழுதுவதாக பெருமையடித்துக்
கிடந்தான்.. அடுத்தவன்..
மேற்சொன்ன இரண்டும்
இல்லாதிருந்தவன்... வெறுமனே
பச்சையாய் சிரித்திருந்தான்..
குழுக்களாய் வந்திருந்த
நான்கு பேர்களுக்கும் கலாச்சாரவெறி
சிவப்பாய்
கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது...
அனைவர் கண்களிலும்
ஒரு தேக்கரண்டி அளவேனும்
காமம் பொதுவாய் நிரம்பியிருந்தது ....
நானும் கூட கூட்டத்திலொரு
கடைசி நபராக இருக்கலாம்..
காமம் கற்றறியா ஒருவன் ...
தவழ்ந்தே...வந்து வழிந்திருந்தவைகளை
பற்றிக் கொண்டான்...
சூப்பவும் தொடங்கியிருந்தான்...
அவன் கடைவாயில் வெள்ளையாக
வழிந்திருந்த அது...
அவள் கண்களிலும் நிறமில்லாது
உருண்டு கொண்டிருந்தது...
யாரும் கவனித்திரா
இந்நிகழ் கவிதையினை..
அவளின் பிள்ளையெனவோ
அவளுக்குப் பிறக்காமலிருந்த
அவனோ
பின் நாளொன்றில் வரைந்துவிடக் கூடும்....
எழுத்து வடிவிலானதாக.....