பெண்மையின் பருவங்கள்

மங்கையரின் மாண்பினை
மங்காத ஓவியமாய்
வடித்திட்டவரும் பெண்ணே - அதை
வார்த்தைகளில் வடிக்க வந்த நானும் !
பேதையாய் ஒரு
பருவத்தில்
கடலென்ன,மலையென்ன
கதிரென்ன,மாரியென்ன
துள்ளும் மானாய்,மீனாய்
வளைய வரும் கொடி!
சிட்டாய்,கூட்டமாய்
சிறை இல்லா
பட்டாம் பூச்சியாய்
சிறகடிக்கும் வண்டாய்
சேர்ந்தே திரியும் தோழமையுடன்
தேரேறிய சிலை பெதும்பை!
நெருப்பில் வளர்த்த
பிழம்பாய்
நெறி காக்க
நிதம் மலர்ந்த
பஞ்சுப் பூவாய்
போராடும் மங்கை
பின்னர்!
வாழ்க்கை இசையை
இதமாய் இசைக்கும் சங்கீதம் மடந்தை!
குடும்ப வண்டிச் சக்கரத்தின்
அச்சாணியாய் அரிவை!
இல்லமெனும் கட்டிடத்தை
தாங்கும் அஸ்திவாரமாய் தெரிவை!
வாழ்வின் கடமைகளை
செவ்வனே நிறைவேற்றி
குடும்ப வானிலே
சூரியன்,சந்திரனா
நட்சத்திரம்,கிரகம் என
நாலாவிதமாய் ஒளி வீசிடும்
பேரிளம் பெண்!
போற்றியே பாட நேரமில்லை
பெண்மையின் மேன்மை!