நடுகல்லாய் ஒரு பித்தன்

சிலம்பக் கம்பெடுத்து
அடவு குத்தி...
பித்தனாய் திரியும் என்னை
உன் நெற்றியில் பிறையாய் செதுக்கி
மழைத்துளியின் இரகசியமாய் சேமித்து...
பௌர்ணமியின் சிறகுகளில் வலம் வருகிறாய்.

குளக்கரையின் புதருக்குள்
நடுநிசியில் அலைபாய்ந்த நிலவில்
நம் கால்தடம் தேடி
மயில் பீலிக் கண்களோடு
பனம்பஞ்சு மெத்தைகளில்...
உன் செம்பருத்திக் கனவுகளை
சேர்த்து வருகிறாய் நீ.

குறிஞ்சித் திணைக் களத்தில்...
பனிப் பூக்களால் என் ஓவியம் வரைந்தபடி...
சிறகுகளால் சிரித்துச் சென்ற
என் மாய வண்ணத்துப் பூச்சியே....

உன் சிதறிய கொலுசுகளின்
தடம் தொடர்ந்த படி மனவெளியில் அலைகிறேன்....
இன்னமும் கூடு சேராத உன்னை ....

நம் நிலத்தில் நடுகல்லாய் நின்றபடி.

எழுதியவர் : rameshalam (21-May-15, 8:41 pm)
பார்வை : 69

மேலே