பொள்ளாச்சி அபி சிறுகதைத் திறனாய்வு - தல புராணம்

" தல புராணம் " என்கிற பெயரே ஓர் அரசமரத்துக் குளுமையினை மனதுக்குள் வீசுகிறது. காதுக்குள் மிகமெல்லியதாய் கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா ஒலிக்கிறது, விபூதி , குங்குமம், மஞ்சள் , கற்பூரம் , கலந்த கலவையான வாசனையால் எனது அறை நிரம்புகிறது ....." சற்றே பெரிய கதை " என்று அபி கதைத்தொடக்கத்தில் கொடுத்திருக்கும் குறிப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.காரணம் எவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும் அபி அதை வாசிக்கச் சுவாரசியமாக்கி விட்டிருப்பார் என்கிற நம்பிக்கையுடன், தொலைக்காட்சியை அனைத்து விட்டு, அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு கதைக்குள் நுழைகிறேன் ....கைகால் கழுவி, தலைக்கு நீர்தெளித்து பக்தியுடன் கோவிலுக்குள் நுழையும் ஒரு பக்தன் போல .

// எதிரே வரும் வாகனங்கள் நீரில் மிதந்து வருவதுபோல நெளிசல்களுடன் வந்து, //

இந்த உவமையைப் பாருங்கள் .....சில திரைப்படங்களில் பார்த்திருப்போம் , வெப்பமான சாலையைக் காட்டும்போது கானல் நீரின் நெளி நெளித் தன்மையையும் சேர்த்துக் காட்டுவார்கள். ஏதாவது வாகனம் வரும்போது காட்சி ஈரப்பதம் மிகுந்த ஒரு படலம் போல நமது கண்களில் நெளிநெளியும். நான் மூன்று வரிகளில் மெனக்கெட்டுச் சொன்னதை அபி இங்கு ஒரே வரியில் சொல்லப்போனால் ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கிறார் " நெளிசல்களுடன் " என்று !

மேலும் இந்தவரியின் தன்மையைப் பற்றி அது என்னுள் ஏற்படுத்திய காட்சிப்பதிவினைப் பற்றி இந்தக் கட்டுரை முழுக்கவும் சொல்லலாம் ...! நான் ஆசிரியனாகப் பணி புரிந்த போது வகுப்பெடுக்க நாங்கள் மெனக்கெட்டு " பாடத்திட்டம் " எல்லாம் எழுதி இன்றாவது புத்தகத்தைப் பார்க்காமல் நடத்த வேண்டுமே என்று பாடப்போருளை மனப்பாடம் செய்து கொண்டிருப்போம் ..சக தமிழாசிரியர் மட்டும் மிகவும் குளுமையாக தினமலர் படித்துக் கொண்டிருப்பார். " என்ன சார் நீங்க ப்ரிபேர் பண்ணலையா ? எப்புடி கிளாஸ் எடுப்பிங்க ? " என்று கேட்டால், சிரித்துக் கொண்டே சொல்வார் " அடப் போங்க சார் .......எனக்கு ஒரு குறள் போதும் . அதை வைச்சு ஒரு வகுப்பையே முடிச்சிடுவேன் " என்று ! அந்த அளவுக்கு அவருக்கு திருவள்ளுவர் மீது நம்பிக்கை. அதுபோல அபி அவர்களின் மேற்கண்ட அந்த ஒரு வரி போதும் அதை வைத்து நான் இந்தத் திறனாய்வையே முடித்து விட முடியும். அந்த அளவுக்கு எனக்கு அபி மீது நம்பிக்கை.

// சீனு,தனக்கு சாதகமாய் பவித்ராவும் ஏதாவது பேசினால் நன்றாயிருக்குமே..’ என்று எண்ணமிட்டபடி அவளைப் பார்த்தான். பவித்ராவோ, அவனை நட்டாற்றில் விடும் விதமாக, வெகு சீரியஸாக சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேல்முருகன் தனக்குள் சிரித்துக் கொண்டான். //

இந்த வரிகளை எடுத்துச் சற்றே மெருகேற்றினால் அது கவிதையாக மாறிவிடும் என்றே தோன்றுகிறது ...மனப்போக்குகளின் யதார்த்த நுட்பங்களைக் காட்சிப்படுத்துவதிலும் அபி வல்லவர் என்பதை நிருபிப்பதற்கு ஒருபானைச் சோறு இந்த வரிகள்.

// ‘அப்பா எப்படி துளியும் சிந்தாமல் அப்படியே குடிக்கிறார்..’ என குழந்தைகள் இருவரும் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். //

என் தந்தை வீட்டில் பூஜை போடும்போதெல்லாம் தேங்காயை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அரிவாளால் வெட்டுவார். கச்சிதமாக ஒரு இம்மி பிசகாமல் இரண்டாக உடையும். அந்தக் காட்சியை இப்போது பார்த்தாலும் எனக்குள் வியப்பு .....! எல்லா அப்பாக்களுமே தத்தம் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் ஒரு வியப்பையேனும் கைவசம் வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வரிகள் ......!

// “நாங்க..பொள்ளாச்சியைத் தாண்டி, அங்கலக் குறிச்சியில் இருக்குற அம்மன் கோவிலுக்குப் போறோம்”

கிழவியின் முகத்தில் மலர்ச்சியும்,கலவரமுமாக கலவையான உணர்ச்சிகள் தோன்றி,மறைந்தன . “என்னையத் தப்பா நெனக்காதீங்கம்மா..தயவு செஞ்சு என்னையும் அங்கியே இறக்கிவுட்டுடுங்க.., அதுதான் என்னோட சொந்த ஊரு..ரொம்ப வருஷம் கழிச்சு இப்பத்தான் அங்க போறேன்.!”என்ற படியே பின்னோக்கி சாய்ந்து,கண்களை மூடிக் கொண்டாள் கிழவி. //

இந்த இடத்தில் நான் வியக்கும் விஷயம் ....எவ்வித துருத்தலும் உறுத்தலும் இன்றி அபி கதையின் இந்தப் பகுதியைக் கடந்திருப்பதுதான். காரில் இருப்பவர்கள் அங்கலக் குறிச்சி என்கிற ஊருக்குப் போகிறார்கள், எதிர்பாராதவிதமாக காரில் ஏற்றப்பட்ட வழிப்போக்கரான இந்தக் கிழவியும் தான் அங்கேதான் போகவேண்டுமேன்கிறாள் ......! நிச்சயம் இந்தப் பகுதியை நான் எழுதியிருந்தால் துருத்திக் கொண்டு தெரியும் அதன் செயற்கைத்தன்மையுடனே எழுதியிருப்பேன். ஆனால் அபி அந்தச் செயற்கைத் தன்மையை,

// கிழவியின் முகத்தில் மலர்ச்சியும்,கலவரமுமாக கலவையான உணர்ச்சிகள் தோன்றி,மறைந்தன //

என்கிற முடிச்சுப் போட்டு கதையின் யதார்த்த இழை அறுந்து போகாமால் காப்பாற்றியிருக்கிறார்.


// பக்கத்துலேயே ரத்தம் வழியுற முகத்தோட,விரிச்சுப் போட்ட தலையோட, நெலா வெளிச்சத்துலே மின்னிகிட்டு,ஓங்காரக் காளியாட்டம் உக்கிரமா ஒரு காலு தரையிலே ஊணிகிட்டு,அங்க கிடந்த பாறைமேலே உக்காந்துகிட்டு,இருந்தா மகேசுவரி. //

வெகுநாளைக்குப் பிறகு சிலிர்ப்பு ஏற்படுத்திய ரத்தமும் சதையுமான உயிருள்ள வரிகள் என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும். இந்த வரிகளின் உக்கிரமான வெப்பப் பெருமூச்சு எனது காதுகளுக்கு அருகே கேட்பதில் " காட்சிப்பதிவின் மன்னன் " என்கிற பட்டத்தை அபி அவர்களுக்கு வழங்கக் கடமைப்பட்டுள்ளேன்.

// கண்களிலிருந்து கேமராவை நகர்த்திக் கொண்டு நிமிர்ந்தான்.இப்போது மகேசுவரி அம்மன் முகத்தை தனது இருகைகளாலும்,சொட்டும் கண்ணீருடன் லேசாக வருடிக் கொண்டிருந்த, அந்த உருவத்தைப் பார்த்த வேல்முருகனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அது,இவர்களோடு காரில் வந்த அந்தக் கிழவிதான்..! //

இந்த வரிகளில் கதை முடிகிறது. தண்டுவடத்தில் ஏற்பட்ட சிலிர்ப்பு அடங்கச் சற்று நேரமாகிறது ...! இப்படியும் இருக்குமா ? என்கிற பிரமிப்பில் இருந்து விடுபட முடியவில்லை. கடவுள்கள் உருவான விதம் இப்படித்தானா ? அப்போ கடவுள் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமேதானா என்கிற ஏமாற்றம் கலந்த பெருமூச்சு ஒரு வாசகனாக இதைப் படித்த என்னில் வெளிப்படுவதை கதையின் வெற்றி என்றே கொள்ளலாம்.

கதையின் நாயகி மகேஸ்வரி ஊருக்குத் தன்னை ஏன் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, என்பதில் மௌனமாக இருந்துவிடுகிறார் அபி ....அந்த மௌனமே ஒரு தீரா விளக்கத்தைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

ஆங்காங்கே வரிகளில் ஒருமை பன்மை பிழைகளை அபி சற்றுக் கவனித்திருக்கலாம். அடுத்து அந்த ஐநூறு வருடம் ஐம்பது வருடமாக மாறும் இடத்திலேயே கதையின் முடிவை ஒருவாறு யூகிக்க முடிவது மெல்லிய பலவீனம் என்றெல்லாம் ஒரு சில குறைகளைச் சொல்லலாம் தான் .... ஆனால் அபி அவர்களின் கதைகள் எங்களுக்கு இளையராஜா பாட்டுப் போல ..அதில் சங்கீதப் பிழை கொஞ்சம் ஆங்காங்கே இருக்கலாம் தான் ...ஆனால் வெறும் புல்லாங்குழலை வைத்துக் கொண்டே அனைவரையும் தனது இன்னிசையால் கட்டிப்போடும் இளையராஜா போல எளிய மனிதர்களையும் அவர்களின் யதார்த்தங்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு நமது இரசனைகளுக்கான ஒரு கதையை உருவாக்கி விடுகிறார் அபி.

எப்போதும் எனக்கு ஒரு நல்ல கதையைக் கேட்டாலோ படித்தாலோ பார்த்தாலோ , அதன் பிறகு கொஞ்சம் பசியெடுக்கும், ஏதாவது சாப்பிடத்தோன்றும். மாலையில் குடித்த தேநீர் மற்றும் கொஞ்சம் பிஸ்கட்டுகள் ஏற்படுத்திய மந்தத்தன்மையால் இன்றிரவு சாப்பிடாமல் படுத்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான் சாப்பிடப் போகிறேன் .எனக்குப் பசிக்கிறது .........

============================================================================

இக்கட்டுரை என்னால் எழுதப்பட்டது என்று உறுதியளிக்கிறேன் ...

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (12-Jun-15, 6:00 pm)
பார்வை : 102

மேலே