வணங்கிடும் கரங்களை வலுப்படுத்து

உலகம் உயர்ந்திட உனைஉயர்த்து - உன்
உழைப்பின் பயனை வரையறுத்து
அல்லும் பகலும் துயில்விடுத்து - உடல்
அணுவினை நாளும் செயல்படுத்து

கை,கால் உனக்குத் துணையாக்கு - மனக்
கருத்தை அதற்கு இணையாக்கு
கருத்தில் உழைக்கும் எண்ணம்வந்தால் - துன்பக்
காரிருள் விலகிஒளி கொடுக்கும்

மின்னலும் இடியும் இணைகையிலே - பெரு
மழைவந்து மண்ணில் வளம்கொடுக்கும்
கண்ணும் கருத்தும் இணைகையிலே - உன்
கனவுகள் பலிக்கும் வழிகிடைக்கும்

வணங்கிடும் கரங்களை வலுப்படுத்து - உனை
வந்தடையும் வெற்றி குரல்கொடுத்து
உறக்கத்துக்கே நீ விடைகொடுத்து - உன்
ஊக்கத்தை எழுப்பிடு படைஎடுத்து

எண்ணத்தை ஏணிப் படியாக்கி - நீ
எழுந்து நடந்திடு துணிவோடு
கண்கள் கலங்கிடும் துடைத்துவிடு - உன்
காரியம் நடக்கணும் பொறுத்துவிடு

கொஞ்சிச் சிரித்து விளையாடி - உனை
கொத்திட நினைக்கும் சமுதாயம்
வசியம் செய்யும் பேச்சாலே - உனை
வஞ்சிக்க நினைக்கும் மனதாலே!

விண்ணை உன்எண்ணம் தொட்டுவிட - தினம்
மண்ணை உன்வியர்வை தொட்டிடணும்
உன்கனவுகள் எல்லாம் பலித்துவிட - நீ
உரமிட்டு ஊக்கத்தை பெருக்கிடணும்

இடரெல்லாம் சிறு இனுக்காகி - பெரு
இருளில் மறைந்திடும் உழைப்பாலே
சுடர்தரும் வாழ்வு உனைநாடும் - நீ
சுகம்பெரும் காலம் தினம்தேடும்


எழுதியவர்
பாவலர் . பாஸ்கரன்

எழுதியவர் : (30-Aug-15, 10:06 pm)
பார்வை : 47

மேலே