காதல்-சாதல் எங்கள் வாழ்க்கை

இதோ
கசங்கிய நிலையில்
இங்கே ஒரு
இளமை உறங்குகிறது...

மனதின் தொடர்தலில்
ஆரம்பித்த காதல்
உடலின் தொடர்பில்
முடிந்து போனதால்
இதயமுள்ள கல்லறைக்குள்
உயிரில்லாத இளமை மட்டும்
இங்கே உறங்குகிறது.

நாகரீக வாக்கில்,
இளமையின் ஆர்ப்பரிப்பில்
கணநேரம் தனை மறந்து
ஏமாந்த கொடுமைக்காய்
தாவணித் தூக்குக்கயிறுக்கு
தன் உயிரைத் தந்துவிட்டு
களங்கமில்லா மனம் மட்டும்
இங்கே உறங்குகிறது..

இளவேனில் ராகங்களை
இமைகளுக்குள் உள்ளடக்கி
வசந்த எதிர்காலப் புதுக்கவிதைகளை
வாழ்வில் பாட நினைத்த
பூங்குயிலின் மோகனங்கள்
முகாரிக்குள் முடங்கிப்போய்
காற்றாய்ப்போன
எதிர்கால எண்ணங்கள் மட்டும்
இங்கே உறங்குகிறது

உற்றோரை மறந்து
தன்னவனைப் பூஜித்த
தெய்வமொன்று
கல்லறைக்குள் கரைந்த படி...

சுவைத்த பின்னர்
விட்டெறிந்த தன்னவனோ
மாப்பிள்ளை முறுக்கில்
மணவறைப் பந்தலில்.அமர்ந்தபடி...

ம்ம்..
வாழ்க்கை வாழ்வதற்கே..

எங்கள் ஏழை வாழ்க்கை
மற்றவர்கள்
வாழ்ந்து பார்ப்பதற்கென்றே.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (11-Sep-15, 9:15 am)
பார்வை : 54

மேலே