மூளைப் பதிவு

மூளைப் பதிவு

என்மூளை எவன்புகுந்து எழுதிப் போனான்?
எழுதியபின் எழுதியவன் என்ன ஆனான்?
மின்னலொன்று மின்னிவிட்டுப் போனதைப் போல்
மேலெழும்பி சிலவார்த்தை வந்து நிற்க
கண்ணிமைத்தல், கைசொடுக்கல் போல நானும்
கைப்பிடித்த பேனாவால் எழுத லானேன்
என்னைப்போய் கவிஞன் எனச் சொல்லுகின்றீர்?
இன்னொருவர் எழுதியதைச் சொன்ன நானா?

அவனெழுதி வைத்ததனை நகலெடுத்தேன்
அப்படியே செராக்ஸ்போல் எழுதலானேன்
தவறின்றி நானெழுத நாளும் நாளும்
தமிழிடத்தில் பிச்சையினை எடுத்தேன் பாரும்
சுவரின்றி சித்திரந்தான் வரையப் போமோ?
சூடின்றி தங்கந்தான் நகை ஆகுமா?
அவனின்றி எதுஅசையும் , நான் அசைய?
அவன்வணங்கி இவன்தொடங்கிச் சொல்லு கின்றேன்.

தவமிருந்தா கவி சொன்னேன் ? நாவில் காளி
தான்எழுத நானெழுதத் தொடங்கினேனா ?
சிவன்மனைவி பால்குடித்தா கவிதை சொன்னேன்?
சிறுகூடல்
பட்டியிலா நான் பிறந்தேன்?
அவன்படித்த பள்ளியிலே நான்படித்தேன்
அதற்காகக் குருகுலத்தில் கற்ற பேர்கள்
எவரேனும் கவிஎழுதிச் சிறந்ததுண்டா?
என்பிறப்பின் ரகசியத்தை யார் அறிவார்?

எழுதியவர் : கனவுதாசன் (28-Oct-15, 2:54 pm)
பார்வை : 68

மேலே