இமைகளே உயிர்ப்பூவின் இதழ்களே

இமைகளே!

உயிர்ப் பூவின்
இதழ்களே!...

நீங்கள்
மூடிக்
கொண்டால், கரி
பூசிக் கொள்ளும் உலகம்,
நீங்கள்
மலர்கின்ற போது மட்டுமே
வண்ணங்களுடன்
பேசிக் கொள்கிறது

அண்டத்தையே அனலாக்கும்
ஆதவனையே அடைக்கும் சின்னச்
சிறகுகள்
ஒழிக்க இயலா உடன் கட்டை
உறவுகள்....

காதலில்....
கனலும் கண்களின்
வெம்மை நீக்க வீசுகின்ற
சாமரங்கள்...
காதற்கோட்டைக் கனவுச்
சாளரங்கள்...

தொடாமல் விருந்து உண்ணும்
பூக்களால் ஆன வண்டுகள்
வண்டுகளாய் மாறும் பூக்கள்

கண்ணீர் சுனைகளின்
கரைகள்...
காட்சிமுன் விழுகின்ற
திரைகள்....

எழுதியவர் : முத்துமணி (1-Nov-15, 4:39 am)
பார்வை : 59

மேலே