நிழலின் ஒளி
என்னிலிருந்து
எடுத்துப்போட்டிருந்த
பிண்டம்
அருகே கிடந்தது
பெண் என்றார்கள்
அழுதது
சிறியதாய்
கை கால்கள்
காது மூக்கென
அனைத்தையும்
தானே
முளைப்பித்துக்கொண்டிருந்தது
என்னிடம்
எவ்விதமாயும்
ஆலோசிக்காமல்
கேட்டிருந்தால்
இன்னும் கொஞ்சம் வெளுப்பு
எடுப்பான மூக்கு
அகன்ற கண்களென
ஆயிரம் திருத்தங்கள்
கைவசம் இருந்தன
அதை வெறுத்தோ
இல்லை
என் புலனுக்குஎட்டாததென
எண்ணியோ
தனக்கானதை
தானே முளைப்பித்துக் கொண்டது
என்
தலைமுறைத் தோட்டத்தின்
புதிய பூச்செடி
காதல் பொய்த்து
களங்கமென்றாகி
இருளறைக்குள் ஒடுங்கிய
எனக்குள்
எது இப்படியோர சூரியன் ?
என் நம்பிக்கையிழப்புகளின்
நரக நடைப்பயணத்தில்
விரல் நீட்டப்பற்றி
பின் தொடரும் நிழல்
முறுவலித்தது
நானும் புன்னகைத்தேன்
என் கண்ணீர் வலிகளைமீறி