இறைவன் பிறந்த இனிய இரவு

வையத்துக் கடுங்குளுர்ச்சி வாட்டும் இரவுகளில்
வழக்கமான இரவா அது? - மீட்பை
மையமாய் வைத்தே மேதினிக்கு பெருமை சேர்த்த
மேன்மைமிகு இரவே அது

பையப் பைய ப் பாவம் பரவியதா லிந்த
பூமியே இருளாயிற்று - எங்கள்
அய்யன் இயேசுபிரான் அவதரித்த அவ்விரவால்
அவனிமிகு அருளாயிற்று

ஆடு மேய்ப்பவருக்கே ஆண்டவர் பிறந்த தேதி
அவ்விரவில் சொல்லப்பட்டது - ஒரு
ஈடு இணையற்ற இரவாய் அதுவமைய - பாவம்
படுகுழியில் தள்ளப்பட்டது

ஏடு வழி இறைவாக்கு எடுத்துரைத்த எதிர்பர்பாப்பு
அன்றிரவு வெல்லப்பட்டது - எங்கோ
மாடடை குடில் தேடி மழலை முகம் தரிசிக்க - மந்தை
காவல் குழு செல்லப்பட்டது

ஈன்றோராய் சூசை மரி இறைமகனின் அருகிருந்த
இனிமைமிகு இரவாயிற்று - பல
சான்றோர்கள் முன்னுரைத்த சத்திய இறைவாக்கு
அன்றிரவே நிறைவேறிற்று

ஆன்றோராய் தோன்றவில்லை அரசராய் காலூன்றவுமில்லை
ஏழ்மையொன்றே வரவாயிற்று
வானோர்கள் புகழொலிக்க வார்த்தை மனுவுருவெடுக்க
மானிடர்தம் உறவாயிற்று

குளிர்மிகு இரவு அதை குவலயத்தார் மறந்திடாது
கொண்டாடல் என்றும் வாடிக்கை
துளிர்விடும் பாவங்களை வளரவிட்டு வாழ்வோர்க்கு
கிறிஸ்து பிறப்பு வெறும் கேளிக்கை - இளந்
தளிரென ஏழ்மையிலே இயேசு பிறந்த நிலை
காண்பதற்கு இல்லை வேடிக்கை - அவரின்
ஒளிர் முகம் தரிசித்திட உண்மையிலேயே விருப்பப்பட்டால் - உள்ளத்
தூய்மையொன்றே நமது காணிக்கை . . .

அனைவருக்கும்

இயேசு பிறந்த இனிய நாள் வாழ்த்துக்களோடு ,

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

by
JESUSPAUL

எழுதியவர் : பவுல்.S (23-Dec-15, 11:26 pm)
சேர்த்தது : பவுல் ராஜ்
பார்வை : 3707

மேலே